Breaking News

டெல்லியில் பிரபாகரன் சிறையில்இருந்த வரலாற்று சம்பவத் தொடர்


ஒரு விசர் நாயைக் கூட கொல்லும் உரிமை அற்ற
,அல்லது சட்டம்.. நிதி போன்ற அதிகாரங்கள் அற்ற, மாநில அரசை ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தி,இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுமாறு தலைவர் பிரபாகரனை டெல்லியில் சிறை வைத்த இந்திய உளவுத் துறை!

1987,ஜூலை5, கப்டன் மில்லரின்,நெல்லியடி இராணுவ முகாம் மீதான, மரண அடிக்குப் பின்னர் நூற்றுக் கணக்கான சிங்கள இராணுவத்தினர் மடிந்ததைக் கண்டு அதிர்ந்த இலங்கை அரசு,அதுபோல் ஏனைய முகாம்கள் மீது புலிகள் தாக்குதல் தொடுத்து அழிக்கும்போது, இலங்கை இராணுவத்தினரின் மனோ நிலை,பாரிய உளவியல் தாக்கங்களை எற்படுத்தி விடும் என்பதால்,அதைத் தடுக்கும் வகை அறியாது இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் காலடியில் விழுந்து 'புத்தம் சரணம் கச்சாமி' என்று அபயக் குரல் எழுப்பினார்.

இலங்கையைக் காக்க இந்தியா ஈழத் தமிழர்களை அழிக்கும் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு இலங்கைக்கு தன் ஒரு லெட்சம் படைகளை முதற் கட்டமாக அனுப்பி வைத்தது.ஒப்பந்தத்தை செய்ய கொழும்பு வந்த ராஜீவ் காந்தி கேவலம் ஒரு கடற்படைச் சிப்பாயால், துப்பாக்கிப் பிடியால் பிடரியில் தாக்கப் பட்டார் என்பது ஓர் ஈனத்தனமான வரலாறு.

இது தொடர்பான காணொளி பதிவு


அதே சிங்களச் சிப்பாயிடம் அன்று குண்டுகள் நிரப்ப பட்ட ஒரு துப்பாக்கி இருந்திருந்தால் ராஜிவை சுட்டுச் சல்லடை ஆக்கியிருக்க கூடும்.அத்தனை வெறியுடன் அவன் இந்தியப் பிரதமரை அன்று தாக்கினான். அடியையும் வாங்கிக் கொண்டு வந்து ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுடன்,இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டவர் தான் ராஜீவ்..

உலகில் ஒரு மகா ரோசக்கார பிரதமர் அப்போது உண்டென்றால் அது ராஜீவ் ஆகத்தான் இருந்திருக்க வேண்டும். உலகில் ஒரு நாட்டின் பிரதமரை இன்னும் ஒரு குட்டி நாட்டில் உள்ள சிப்பாய் ஒருவன்..துப்பாக்கிப் பிடியால் தாக்கினான்,என்பதை நான் இதுவரை எங்கும் கேள்விப் பட்டதில்லை. 

யாரு அவர்..? நேருவின் பேரன்..பாரு?..சாரு' பைலடுக்கு படித்துவிட்டு அரசியல் சேற்றுக்குள் குதிக்க வந்தவர்..அதனால்தானோ, அதன் பின் அத்தனை கூத்துகளும்,அழிவுகளும், ஈழத்தில் நடந்தேறின?

ஈழத் தமிழர்களுக்கோ அல்லது அவர்களின் நலன்களுக்கோ எதுவித சம்பந்தமும் இல்லாத ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுமாறு அப்போது சென்னையில் இருந்த தலைவர் பிரபாகரனை வற்புறுத்தியது இந்திய உளவு அமைப்பான 'ரோ'.

ஒப்பந்தத்தின் பக்கங்களை புரட்டி புரட்டி படித்தார் தலைவர். அதில் ஒரு புண்ணாக்கும் ஈழத் தமிழர்களுக்கு ஏதுவாய் இருக்கவில்லை ..புண்ணாக்கு வேண்டாம் ஒரு பிடி வைக்கோல் இருந்திருந்தாலாவது பின்னர் பார்க்கலாம் என்று கையெழுத்துப் போட்டிருப்பார் தலைவர்.

அது கூட இல்லையே அதில்? ஆயினும், சென்னையில் இருந்த தலைவரை இரவோடு இரவாக டில்லிக்கு விமானம் மூலம் நகர்த்தியது ரோ'.அங்கே ஓர் நட்சத்திரக் கோட்டலில் அவரைத் தங்கவைத்தது.

வகை வகையாய்,வக்கணையாய் ,உணவு வகைகளை அள்ளி வழங்கியது. சீமை உணவுகளையும் பஞ்சணை மெத்தையையும் கண்டால் புலி புல்லைத் தின்னும் என்று எதிர் பார்த்தது இந்தியா.

ஆனால்,தமிழ் ஈழப் புலி அதை தொடக்கூட மறுத்து. சோறையும் கறியையுமே உண்டது..சாதாரண கட்டிலில் படுத்து உறங்கியது..ஆயினும், ஆசை வார்த்தைகளை அள்ளி அள்ளி கொட்டியது உளவு நிறுவனம்.

நீங்கள் முதல் அமைச்சர் ஆகலாம்,விரும்பியதை அதன் பின் செய்யலாம்.. சுருக்கமாக சொல்வதென்றால் உங்களை ஒரு ராஜாபோல் நாங்கள் வைத்திருப்போம்.." என்றெல்லாம் ஆசை வார்த்தைகளை நெய்த் தோசைகளில் பூசிக் கொடுத்தது.

ஆனால் ,அசைந்து கொடுக்கவில்லை பெரும்புலி! தலைப் புலி திட்ட வட்டமாக ஒப்பந்தத்தில் கையெழுத்து இட மறுத்தது. "ஆடுற மாட்டை ஆடிக் கறக்கலாம்,பாடுற மாட்டை பாடிக் கறக்கலாம்,தண்டிக்கிற மாட்டை தண்டித்துக் கறக்கலாம்" என்பதுபோல்,தலைவர் பிரபாகரனிடம் அவர்களின் பயறு அவியவில்லை என்பதால் பயமுறுத்தி,வற்புறுத்தி,இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் சம்மதக் கையெழுத்துப் பெற முயன்றது சகுனிக் கோஷ்டி..

தலைவர் இந்தியாவில் ஒரு விடுதியில் இந்திய அரசின் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டு உள்ளார் என்னும் செய்தி ஈழத் தமிழர்களுக்கு எட்டியது...கொதித்தது தமிழர் அலை! பொங்கியது. தமிழ் ஈழம்!..

அதன் விளைவாக, இந்திய இராணுவ முகாம்கள் முன் மக்கள் மறியல் செய்து,தலைவர் பிரபாகரனை உடன் விடுவித்து ஈழம் அனுப்புமாறு வற்புறுத்தினர்.

தமிழர் படையின் எழுச்சி கண்டு இந்தியா அதிர்ந்தது..இலங்கையில் உள்ள இந்தியப் படைக்கு ஏதும் தீங்கு வருமோ? எனப் பயந்த ராஜிவ்காந்தி.தலைவரை உடன் விடுவித்து ஈழத்துக்கு அனுப்புமாறு கட்டளை இட்டார்.

உடனடியாக ஓர் விஷேட விமானம் தலைவரையும் அவர் மனைவியையும்வேறு சிலரையும் சுமந்து கொண்டு ஈழம் நோக்கிப் பறந்தது. பனியின் குளிரில் மூடிக் கிடந்த ரோஜா மலர்களின் இதழ்கள் சூரியனைக் கண்டதும் மலரத் தொடங்கின.

விமானம் பறந்து கொண்டிருந்தபோது தலைவர் தமிழ் ஈழத்தின் கடல் அழகையும்,நில அழகையும் கண்டு இரசித்தார்..அந்த ஒப்பற்ற தமிழனை,பெருவீரனை தலைவனை,தமிழின் நாயகனை,கரிகாலனை வரவேற்க, தமிழ் ஈழ மக்கள் அலைகடல் என ஆர்ப்பரித்து எழுந்தனர்.

தலைவர் டெல்லியால் விடுவிக்கப் பட்டு விமானத்தில் வந்து கொண்டிருக்கிறார் என்னும் செய்தியை திலீபன் மக்களிடம் கொண்டு சேர்த்தான்.

திலீபனுடன் சேர்ந்து நாமும் அதற்கு தயாராகிக் கொண்டிருந்தோம்..நீண்ட நாட்களுக்குப் பின்னர் தலைவரைப் பார்க்கப் போகிறோம் என்னும் மகிழ்வில் உள்ளம் துள்ளிக் குதித்தது.

(அடுத்த அத்தியாயத்தில் தலைவரின் ஈழ வருகை பற்றியும், திலீபன் அதற்காகச் செய்திருந்த மாபெரும் ஏற்பாடுகள் பற்றியும் எழுதுகிறேன்) (தொடரும்)

-மு.வே.யோகேஸ்வரன் -