தமிழருக்கு சார்பான சர்வதேச நகர்வுகளுக்கு எதிராக இருக்கமாட்டோம் ! ராமபோச
மக்களுக்கு சார்பான சர்வதேச நடவடிக்கைகளுக்கு எதிரான வகையில் செயற்படமாட்டோம் என்று தென்னாபிரிக்க உப ஜனாதிபதி ரமபோஷ தம்மிடம் வாக்குறுதி அளித்தார் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் தென்னாபிரிக்கக் குழுவினரை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
வடக்கு மாகாண சபை நிர்வாக நடவடிக்கைகளை சீரான முறையில் முன்னெடுப்பதற்கு மத்திய அரசு நெருக்கடிகளை ஏற்படுத்திவரும் விடயத்தையூம் அவர்களுக்கு நான் சுட்டிக்காட்டினேன். இலங்கை அரசமைப்பின் 18ஆவது திருத்தம் காரணமாக அனைத்து அதிகாரங்களும் ஜனாதிபதியிடமே உள்ளன. இதனால் சட்டரீதியாகப் பிரச்சினைகளை அணுகித் தீர்வு காண முடியாதுள்ளது என்றும் நான் அவர்களுக்கு விளக்கினேன்.
இதன்போது பதிலளித்த தென்னாபிரிக்க பிரதிநிதிகள், மேற்குலகும் இந்தியாவும் முன்னெடுக்கும் தமிழ் மக்களுக்கு சார்பான சர்வதேச நடவடிக்கைகளுக்கு எதிரான வகையில் நாம் செயற்படமாட்டோம் என்று என்னிடம் வாக்குறுதி வழங்கினார் என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
இதனிடையே மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்று தாம் வழங்கிய குற்றச்சாட்டுத் தொடர்பில் நீதியரசராக இருந்த நீங்கள் ஏன் சட்ட நடவடிக்கை எடுக்க முயவில்லை என்று ரமபோஷ கேள்வி எழுப்பியதாகவும், 18ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அதிகாரங்கள் அனைத்தும் ஜனாதிபதி வசம் உள்ளதாகவும் தற்போதைய நீதியரசர் ஜனாதிபதியின் ஆலோசராக இருந்தவர் என்பதை சுட்டிக்காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே வீதிகள் புனரமைக்கப்பட்டமை உட்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் தெரிவித்ததாக ரமபோஷ கேள்வி எழுப்பியதாகவும் அதற்கு தாம் பதிலளிக்கும் போது
குறித்த வீதிகள் இராணுவத்தினரின் போக்குவரத்துக்களை இலகுவாக்கவும் தென்னிலங்கை வர்த்தகர்களுக்கு வசதியாகவுமே அமைக்கப்பட்டுள்ளனவே தவிர இவ்வாறான அபிவிருத்திகளால் வடக்கு மக்களுக்கு நன்மை எதுவும் இல்லை என்று தெரிவித்தாக குறிப்பிட்டிருக்கின்றார்.










