Breaking News

கெஞ்சினார் மஹிந்த! ஹக்கீம் வெளியேற்றத்தின் பின்னணி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறாமல் தடுக்கும் முயற்சிகளில் கடைசிவரை ஜனாதிபதி ஈடுபட்டிருந்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு முதல் நாள் இரவு அலரி மாளிகையில் ஜனாதிபதிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

இதன்போது முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கையான கரையோர மாவட்டக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ள ஜனாதிபதி, ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அதனை நிறைவேற்றித் தருவதாக வாக்களித்துள்ளார். அதற்கு ஹக்கீம், ஜனாதிபதியின் வாக்குறுதியை எழுத்து வடிவில் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை அது தொடர்பில் தான் யாரிடமும் வாய்திறக்கப் போவதில்லை என்றும் ஹக்கீம் உறுதியளித்துள்ளார்.அந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முஸ்லிம்கள் தொடர்பில் கேவலமான வார்த்தைகளைப் பிரயோகித்து திட்டியுள்ளார். மேலும் தான் பாதுகாப்புச் செயலாளராக இருக்கும் வரை கரையோர மாவட்டத்தை வழங்க விடமாட்டேன் என்றும் கர்ஜித்துள்ளார்.

இதன்போது ஹக்கீமுக்கும், பாதுகாப்புச் செயலாளருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் கோத்தபாய ராஜபக்ச மீது சீறிவிழுந்த ஹக்கீம், பாதுகாப்புச் செயலாளர் பதவிக்கு அவர் பொருத்தமற்றவர் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலையிட்டு, தனது சகோதரனின் வார்த்தைகளுக்காக மனவருத்தம் தெரிவித்திருந்ததுடன் தொடர்ந்தும் தனது அரசாங்கத்துக்கு ஆதரவளிக்குமாறு ஹக்கீமிடம் கெஞ்சியுள்ளார்.

எனினும் கோத்தபாயவின் செயலால் சீற்றம் கொண்டிருந்த ஹக்கீம், ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்காது வெளியேறிச் சென்றிருந்ததுடன், அதற்கடுத்த நாள் அரசாங்கத்திலிருந்தும் வெளியேறும் தனது முடிவை அறிவித்திருந்தார்.