பாரிஸ் பத்திரிகை அலுவலகத்தில் தாக்குதல் - 12 பேர் பலி (காணொலி)
பிரான்சின் நகைச்சுவை மற்றும் பகிடி இதழான "சார்லி ஹெப்டோ"வின் அலுவலகங்கள் மீது முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
மேலும் ஐந்து பேர் பலத்த காயமடைந்திருக்கின்றனர். பாரிசிலிருந்து வெளிவரும் இந்த சஞ்சிகை கடந்த காலங்களில் இஸ்லாமியவாதிகளால் இலக்குவைக்கப்பட்டிருந்தது. இந்தத் தாக்குதல் உள்ளூர் நேரப்படி இன்று காலை நடந்தது. முகமூடி அணிந்த ஆயுததாரிகள் அலுவலகக் கட்டிடத்திற்குள் நுழைந்து தானியங்கி ஆயுதங்களை வைத்து தாக்குதலை நடத்திவிட்டு பின்னர் ஒரு காரில் தப்பியோடிவிட்டனர்.
கொல்லப்பட்டவர்களில் இருவர் பொலில் அதிகாரிகள் என்று தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தை பார்வையிட்ட பிரெஞ்சு அதிபர் பிரான்சுவா ஒலோந்து இந்த சஞ்சிகை மீது நடத்தப்பட்ட தாக்குதலை மிகக் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை என்று வர்ணித்தார்.
தாக்குதலுக்குள்ளான பிரஞ்சு சஞ்சிகையான, சார்லி ஹெப்டொ ஒரு வார இதழ். இது டென்மார்க் பத்திரிகையொன்றில் முதலில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய இறைதூதர் முகமது நபி குறித்த கேலிச் சித்திரங்களை 2006ஆம் ஆண்டில் மறு பிரசுரம் செய்து சர்ச்சைக்குள்ளானது. கடந்த 2011ஆம் ஆண்டில், ஷாரியா ஹெப்டோ என்ற தலைப்பின் கீழ், இறைதூதர் முகமது நபியின் கேலி சித்திரம் ஒன்றை பிரசுரித்த பின்னர், இந்த சஞ்சிகையின் அலுவலகங்கள் தீக்குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாயின.
2012 இல் பல நாடுகளில் " இன்னசன்ஸ் ஒப் முஸ்லீம்ஸ்" என்ற படம் குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டிருந்த சூழலில், இந்த சஞ்சிகை முகமது நபியை நிர்வாணமாகக் காட்டும் படங்களை பிரசுரித்தது. பிரான்சின் இனவெறிக்கெதிரான சட்டங்களின் கீழ் இதற்கெதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையிலும், சார்லி ஹெப்டோ சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரங்கள் பலவற்றை தொடர்ந்தும் பிரசுரித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.








