பொது எதிரணி வேட்பாளர் மஹிந்த என்று உச்சரித்தார் டக்ளஸ்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று முற்பகல் 10 மணிக்கு யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.
இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மஹிந்தவை வாழ்த்தி, அவரை ஆதரிக்கக்கோரி, வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிக்கக் கோரி உரையாற்றினார். அந்தச் சமயத்தில் உரையின் இடையே பொது எதிரணி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ என தடுமாறி வாசித்து பின்னர் திருத்தி வாசித்துக்கொண்டார்.
இதன்போது தான்கொண்டுவந்திருந்த அறிக்கை ஒன்றை வாசித்தார். நான் நடைமுறைச் சாத்தியமான அரசியலை நடத்திவருகிறேன். நான் அரசியல்வாதியல்ல நான் ஓர் அரசியல் போராளி. எனது நடைமுறைச்சாத்தியமான வழியில் அழிவுகளுக்கோ இடப்பெயர்வுக்கோ மக்களை இட்டுச் செல்லவில்லை. பதிலாக மக்களுக்கு எது சரியோ அந்த வழியைப் பின்பற்றிவருகிறேன்.
ராஜித சேனாரட்ண அமைச்சராக ஜனாதிபதியுடன் இருக்கும்போது என்னை புகழ்ந்துவந்தார். இப்போது விமர்சிக்கிறார். நான் எதுவுமே பேசுவதில்லை எனத் தெரிவிக்கிறார். உண்மைதான். நான் உணர்ச்சிவசப்படுத்த, பெயர், புகழுக்காகப் பேசுவதில்லை. மக்களுக்கு எது தேவையோ அதைப் பெற்றுக்கொடுப்பதற்காகப் பேசுகிறேன் என்று கூறிய அமைச்சர் மாம்பழக் கதையையும் கூறினார்.
கூட்டமைப்பையும் வடமாகாண சபையையும் வழமைபோலவே விமர்சித்தார். அண்மையில் யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு பொது எதிரணியினரை விமர்சித்தார். போரை முடிவுக்குக் கொண்டுவந்த முழுப்பொறுப்பும் தங்களையே சாரும் என அவர்கள் புலம்பிவருகின்றனர்.
சந்திரிகா பிரபாகரனின் பெயரை நல்லதற்காகச் சொல்லவில்லை. அதை மக்கள் தவறாக விளங்கிக்கொண்டனர். அவரரே போரின் வெற்றிக்கு முதல் வழிசமைத்தார் எனக் கூறினார். 2009ஆம் ஆண்டு ஜனாதிபதி வெளிநாடு சென்றிருந்த சமயம் பாதுகாப்பு அமைச்சுப் பொறுப்பு மைத்திரிபாலவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது என்றும் அதன்போது புலிகளை அழிக்க தானே கொத்துக்குண்டுகளை வீசச் செய்தார் என்றும் பொதுஎதிரணி வேட்பாளர் கூறிவருகிறார்.
இராணுவத்தளபதியாக இருந்த பொன்சேகாவும் போரின் வெற்றியை தன்னுடையதென்று கூறிவருகிறார். இதில் உண்மையான வெற்றியாளர் யார்? அது மக்களாகிய உங்களுக்கே தெரியும். போரை முடிவுக்குக் கொண்டுவந்து வடபகுதியை அபிவிருத்தி செய்த பொறுப்பு ஜனாதிபதி மஹிந்தவையே சாரும். - என்று புகழ்ந்தார். பொது எதிரணி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ என்று தடுமாறி உச்சரித்து பின்னர் சுதாகரித்து சரியாக வாசித்தார்.







