ஐ.நா உதவியுடன் உள்நாட்டு போர்க்குற்ற விசாரணை
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக, ஐ.நாவின் உதவியுடன் உள்நாட்டு விசாரணை ஒன்றை ஆரம்பிப்பது குறித்து இலங்கை அரசாங்கம் இன்று முக்கியமான கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளது.
இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக, வொசிங்டன், நியுயோர்க், ஜெனிவாவில் உள்ள இலங்கை தூதுவர்கள் அவசரமாக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஐ.நா நடத்தும் விசாரணையின் அறிக்கை வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், இலங்கையின் புதிய அரசாங்கம், அவசரமாக உள்நாட்டு விசாரணையை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளது.
இதற்கு இந்தியத் தரப்பிலும் பச்சைக்கொடி காண்பிக்கப்பட்டுள்ளதாக புதுடெல்லி இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.இதற்கிடையே, விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட இறுதிக்கட்டப் போரின் போது, உண்மையில் என்ன நடந்தது என்று என்பதை விசாரிக்க, ஐ.நாவின் உதவியுடன் உள்நாட்டு விசாரணை ஒன்று விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் இதனை உறுதிப்படுத்தியதுடன், வொசிங்டன், நியுயோர்க், ஜெனிவாவில் உள்ள தூதுவர்களை இதுபற்றிக் கலந்துரையாடுவதற்காக கொழும்புக்கு அழைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.இந்த உள்நாட்டு விசாரணை பெரும்பான்மை சமூகத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தாது என்றும் அவர் கூறியுள்ளார்.








