எரிபொருள் களஞ்சிய வெடிப்பே காரணம்
யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேசத்தில் குடிநீரில் எரிபொருள் உள்ளிட்ட பலவித கழிவுப் பொருட்கள் கலந்துள்ளமைக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளதாக சுன்னாகம் தனியார் மின்னுற்பத்தி நிலையம் தெரிவித்துள்ளது.
போர்க்காலத்தில் மசகு எண்ணெய் அடங்கிய களஞ்சியமொன்று வெடிப்புக்குள்ளானதன் காரணமாக அதிலிருந்து கசிந்த எண்ணெய் நிலக்கீழ் நீருடன் கலந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்காரணமாக, தற்போது நிலத்திலிருந்து வெளியாகும் நீரில் குறித்த எரிபொருட்களும், வேறு சில கழிவுப் பொருட்களும் வெளிப்படுவதாக குறித்த தனியார் மின்னுற்பத்தி நிறுவனம் தமது பக்க நியாயத்தை வெளியிட்டுள்ளது.
சுன்னாகம் தனியார் மின்னுற்பத்தி நிலையத்தினால் வெளியிடப்படும் எரிபொருள் கழிவுகள் கசிந்து நிலத்தடி நீருடன் கலப்பதால் குடிநீர் மாசுபடுவதாக தெரிவித்து பிரதேச மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.இதன்காரணமாக தமக்கு குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுன்னாகம் பிரதேசத்தில் 10 சதுர கிலோமீற்றருக்கும் அதிகமான நிலப்பரப்பில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பிரதேச வாசிகள் குற்றம்சுமத்தியுள்ளனர்.
எனவே, சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வதற்கு பாரிய நெருக்கடி நிலை தோன்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.எவ்வாறாயினும், தமது மின்னுற்பத்தி நிலையத்தினால் பயன்படுத்தப்படும் இயந்திராதிகளினால் குடிநீருடன் எந்தவித கழிவுகளும் கலக்கப்படுவதில்லை என சுன்னாகம் தனியார் மின்னுற்பத்தி நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் லால் பெரேரா தெரிவி;த்தார்.








