Breaking News

யாழ்ப்பாணம் வருகிறார் ஐ.நா உயர் பிரதிநிதி ஜெப்ரி பெல்ட்மன்!

இலங்கைக்கு நாளை பயணம் மேற்கொள்ளவுள்ள  ஐ.நா பொதுச்செயலரின் அரசியல் விவகாரங்களுக்கான உயர் அதிகாரியான ஜெப்ரி பெல்ட்மன் யாழ்ப்பாணத்துக்கும் பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாள் பயணமாக நாளை இலங்கை வரவுள்ள அவர் கொழும்பில் மட்டுமே பேச்சுக்களை நடத்துவார் என்று ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் நேற்று முன்தினம் தகவல் வெளியிட்டிருந்தார்.

எனினும்  தற்போது ஜெப்ரி பெல்ட்மன் யாழ்ப்பாணமும் செல்வார் என்று, ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். ஐ.நா விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் பேரணி ஒன்று நடத்தப்பட்டதன் பின்னணியில், ஐ.நா உயர் அதிகாரியின் யாழ்ப்பாண பயணம் இடம்பெறவுள்ளது.

இதற்கிடையே  நாளை கொழும்பு வரும்  ஜெப்ரி பெல்ட்மன்  நாளை காலை 11.30 மணியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை கொழும்பில் உள்ள விடுதி ஒன்றில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.