ஐ.நா. அறிக்கை வெளியிடப்படப்படுவதற்குள் தேர்தல் நடத்தப்படவேண்டும் - மங்கள
ஜூன் மாத இறுதிக்குள் பாராளுமன்றத் தேர்தலை நடத்தி உறுதியான அரசாங்கத்தை உருவாக்கவேண்டும். ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் இலங்கை தொடர்பான அறிக்கை செப்டெம்பர் மாதம் வெளியிடப்படவுள்ளதனால் அதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வலியுறுத்தியிருக்கின்றார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று பாராளுமன்றக்கட்டடத் தொகுதியில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இடம் பெற்றது. இங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:-
ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் இலங்கை தொடர்பான அறிக்கை செப்டெம்பர் மாதம் வரையில் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கை செப்டெம்பர் மாதம் வெளியிடப்படவுள்ளது. எனவே இம்மாத இறுதியில் பாராளுமன்றத்தை கலைத்து ஜூன் மாத இறுதிக்குள் தேர்தலை நடத்தி உறுதியான அரசாங்கத்தை நாம் உருவாக்கவேண்டும். இல்லையேல் செப்டெம்பர் மாதம் அறிக்கை வெளியிடப்பட்டால் பெரும்பாதகமான சூழலை நாம் சந்திக்கவேண்டிய நிலை ஏற்படலாம். எனவே இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகும் என்று கூறியுள்ளார்.








