புலம்பெயர் தமிழர்களின் போராட்டம் ஓயவில்லை! - ராஜித சேனாரத்னவுக்கு பதிலடி
இலங்கையின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன கருத்துக்கு, ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர், புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து இலங்கை அழுத்தங்களை எதிர்கொள்ளவில்லை என்றும், முன்னர் போன்று ஐ.நாவுக்கு அருகிலும், ஏனைய இடங்களிலும், புலம்பெயர் தமிழர்கள் போராட்டம் நடத்தியதாக,செய்திகளை காண முடியவில்லை என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.
இலங்கை அமைச்சரின் இக்கருத்துக்கு பதிலுரைத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் சுதன்ராஜ், இலங்கையின் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் இலங்கையின் புதிய அரசுத் தலைவர் பிரித்தானியாவுக்கு வருகை தந்த போது, புலம்பெயர் தமிழர்கள் காட்டிய எதிர்ப்பு அனைவரும் அறிந்த ஒன்று.
தற்போது இலங்கையினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் ஐ.நா பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் பத்து இலட்சம் கையொப்பங்களை இடும் போராட்டத்தில் புலம்பெயர் தமிழர்கள் மட்டுமல்ல தமிழக தமிழர்களும் பங்கெடுத்துள்ளனர்.
இலங்கை தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபை விசாரணைக்குழுவின் அறிக்கை சமர்பிக்கப்படும் செப்ரெம்பர் மாதப்பகுதியில் நியூ யோர்க் ஐ.நா பொதுச்சபைக்கு முன்னாலும் ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபைக்கு முன்னாலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் யாவும் ஒன்றுபட்டு நடத்துகின்ற கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட இருக்கின்றதென அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.