ஹக்கீமும் திகாம்பரமும் அரசை விட்டு வெளியேற வேண்டும்
இருபதாவது திருத்தத்திற்கு அமைச்சரவையில் ஆதரவு தெரிவித்து விட்டு வெளியில் எதிர்க்கும் ஹக்கீமும், திகாம்பரமும் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என நேற்று சபையில் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, இனவாதத்தையும், மதவாதத்தையும்,
பிரிவினை வாத்தையும் மற்றும் அடிப்படை வாதத்தையும் ஆதரிக்கும் குழுக்களே 20ஐ எதிர்க்கின்றது. ஐ.தே.கட்சி இதனை நிறைவேற்றுவதற்கு வேண்டுமென்றே தடை போடுகின்றது என்றும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற 20வது திருத்தம் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே எதிர்கட்சி தலைவர் நிமால் சிறிபால டி சில்வா இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் எதிர்கட்சி தலைவர் மேலும் உரையாற்றுகையில்,
அரசாங்கம் இந்த விவாத்தை இதய சுத்தியுடன் முன்வைக்கவில்லை. எதிர்கட்சியை விமர்சிக்கும் இலக்கிற்காகவே இவ்விவாதம் கொண்டுவரப்பட்டது. அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் 19வது திருத்தமும், 20வது திருத்தமும் நிறைவேற்றப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டது.
ஆனால் இன்று 19 நிறைவேற்றப்பட்டு விட்டது. 20ஐ நிறைவேற்றுவதை பின்தள்ளும் முயற்சிகளை ஐ.தே.க முன்னெடுத்து முட்டுக்கட்டை போடுகின்றது. தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பிலான 20வது திருத்தம் தொடர்பாக சிறு கட்சிகள் மற்றும் நாம் பிரதமருடன் 20 தடவைகளுக்கு மேல் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். அத்தோடு இது தொடர்பில் அமைச்சரவையில் அனைவரும் இணங்கிய பின்னரே 20க்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே அமைச்சரவையில் ஆதரித்துவிட்டு இன்று வெளியில் ஹக்கீமும், திகாம்பரமும் எதிர்க்கின்றார்கள். உண்மையிலேயே இவர்கள் எதிர்த்தால் அரசை விட்டு வெளியேற வேண்டும். அரசின் திருத்தம் எதிர்க்கட்சியினதும் ஆளும் தரப்பினரதும் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளது.
இது அரசின் இயலாமையே வெளிப்படுத்தியுள்ளது. தற்போது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. எனவே தேர்தலில் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்ற காரணத்தை முதன்மைப்படுத்தி 20வதை நிறைவேற்றாது காலத்தை கடத்தும் நாடகத்தையே அரசு அரங்கேற்றி வருகின்றது.
இத்திருத்தம் தொடர்பாக பிரச்சினைகள் இருப்பின் அது தொடர்பில் குழு நிலையின் போது விவாதிக்கலாம். திருத்தங்கள் சமர்ப்பிக்கலாம். பொதுத்தேர்தலில் எனது தொகுதியில் நான் தோல்வியடைந்தாலும் பரவாயில்லை. நான் இதனை ஆதரிக்கின்றேன். இது உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.
இன, மத, மொழி, குல ரீதியில் மீண்டும் தேர்தல் முறைமை மாற்றம் நாட்டுக்கு தேவையில்லை. இவ்வாறான நிலையில் ஆதரிப்பவர்களே 20 ஐ எதிர்த்துள்ளனர் என எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.