யாழ். மிருசுவில் பகுதியில் எண்மர் கொலையுடன் தொடர்புடைய இராணுவ வீரருக்கு மரண தண்டனை
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட எட்டுபேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் குற்றவாளியாக காணப்பட்ட இராணுவ உறுப்பினருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.
இராணுவ சார்ஜன் ரத்நாயக்க முதியான்சேலாகே சுனில் ரத்னாயக்க என்பவருக்கே நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளி உள்ளிட்ட ஐவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் சாட்சிகளில் எழுந்த சந்தேகத்தினால் ஏனைய நான்கு சந்தேகநபர்களையும் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
மேல்நீதிமன்ற நீதிபதிகளான லலித் ஜயசூரிய மற்றும் பிரீத்தி பத்மன் சூரசேன ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கின் முறைப்பாட்டாளர்களை பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சரத் ஜயமான்ன வழிநடத்தினார்.
2000 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் திகதி மிருசுவில் பகுதியில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருந்தது. கொலை செய்யப்பட்ட எட்டு பேரில் ஐந்து மற்றும் 15 வயதான இரண்டு சிறுவர்களும் அடங்கியிருந்தனர்.








