20வது திருத்தச் சட்டமூலம்! இறுதி முடிவெடுக்க அவசரமாக கூடுகின்றன தமிழ்க் கட்சிகள்
தேர்தல் முறை மாற்றத்தை உள்ளடக்கிய 20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இது குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் கொழும்பில் கூடி ஆராயவுள்ளனர். இந்த சந்திப்பு பத்தரமுல்லையில் இன்று வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், இராஜாங்க கல்வியமைச்சருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய பிரதான கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் கலந்கொள்ளவுள்ளனர்.
20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக இன்று இடம்பெறவுள்ள இந்த சந்திப்பின் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்து தெளிவுபடுத்த தீர்மானித்துள்ளதாக வீ. இராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.