Breaking News

தமிழ் இளைஞர்கள் கடத்தல் விவகாரம்! கருணா, பிள்ளையான், டக்ளஸ் ஆகியோரை விசாரிக்க குழு

தமிழ் இளைஞர்கள், குடும்பஸ்தர்கள் கடந்த காலங்களில் ஆயுதக் குழுக்களால் கடத்திச் செல்லப்பட்டமை தொடர்பாக விசாரணை செய்வதற்கென 5 பேர் அடங்கிய குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரியந்த குணவர்தன தலைமையில் நியமிக்கப்பட்ட இந்த விசாரணைக் குழுவில் பெண் ஒருவர் உட்பட 5 பேர் அடங்குகின்றனர்.

இவர்கள் நாளை மறுதினம் காணமல் போனோர் ஆணைக்குழுவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு வழங்கிய நேர்காணலின்போது தெரிவித்தார்.

ஆயுதக் குழுக்களினாலும், படையினரினாலும் தங்களது பிள்ளைகளும், கணவரும் கடத்திச் செல்லப்பட்டமை தொடர்பில் பொது மக்கள் வழங்கிய சாட்சியங்களையும், முறைப்பாடுகளையும் குறித்த குழுவினர் பெற்றுக் கொள்ளவுள்ளதாக அந்த பேச்சாளர் கூறினார்.

இதன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆணைக்குழுவை சந்தித்து பேச்சு நடத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்களினால் இதுவரை மூவாயிரம் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதில் நாடாளுமன்ற உறுப்பினரான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளள் தேவானந்தா ஆகியோருக்கு எதிராகவே அதிகளவான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதோடு, பாதுகாப்பு பிரிவினர் சிலர் மீதும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் இந்த முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கென நியமிக்கப்பட்டுள்ள குழு எதிர்வரும் சில தினங்களில் இவர்களை சாட்சியளிப்பதற்காக அழைக்கும் என்று காணாமல் போனோர் ஆணைக்குழுவின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். 

அதேவேளை, இவர்களிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் அது குறித்த அறிக்கை ஒன்று சட்டமா அதிபர் திணைக்களத்திடம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இவர்கள் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டால் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதி மற்றும் ஆலோசனையுடன் இவர்கள் மீது விசேட நீதிமன்றம் அமைக்கப்பட்டு, வழக்கு தாக்கல் செய்யப்படும் என ஆணைக்குழுவின் பேச்சாளர் மேலும் கூறினார்.