Breaking News

துணுக்காயில் புதிதாக சுற்றுலா நீதிமன்றம்

முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேசத்தில் சுற்றுலா நீதிமன்றம் ஆரம்பிப்பதற்கு நீதி சேவைகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, ஜூலை மாதம் 8 ஆம் திகதி முதல் துணுக்காயில் புதிதாக சுற்றுலா நீதிமன்றம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

துணுக்காய் பிரதேச செயலகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள சுற்றுலா நீதிமன்றத்தின் ஊடாக மாங்குளம் மற்றும் மல்லாவி பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அத்துடன், மாதத்தில் இரண்டு தடவைகள் புதன்கிழமைகளில் துணுக்காய் சுற்றுலா நீதிமன்றம் செயற்படவுள்ளது. புதிய சுற்றுலா நீதிமன்றத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எம்.எஸ்.எம். சும்தீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாங்குளம் மற்றும் மல்லாவி பொலிஸ் பிரிவுகளுக்கான வழக்குகள் இதுவரை முல்லைத்தீவு நீதிமன்றத்திலேயே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு துணுக்காய் பிரதேசத்திற்கான சுற்றுலா நீதிமன்றம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.