ஐ.நா. மேற்பார்வையோடு இடம்பெறும் உள்ளக விசாரணையை ஏற்க முடியாது - சிவாஜி
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதியும் நிரந்தர தீர்வும் கிடைக்கவேண்டுமெனத் தெரிவித்த குருநாகல் மாவட்டத்தில் சுயேச்சையாகப் போட்டியிடும் எம்.கே. சிவாஜிலிங்கம் ஐ.நா. சபை, சர்வதேச கண்காணிப்புக்குழு மேற்பார்வையில் இடம்பெறும் உள்ளக விசாரணையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாதெனத் தெரிவித்துள்ளார்.
ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் ஆணையாளருக்கு தாம் அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து அங்கு அவர் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசிய இனம், சிங்கள பெரும்பான்மை இனத்தால் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றது. சுதந்திர நாள் முதல் தமிழருக்கு எதிரான இனப் படுகொலைகள் இடம்பெற்று வருகின்றன. உரிமைகள் பறிக்கப்பட்டு நிலங்கள் பறிக்கப்பட்டு அவர்கள் மீது ஆக்கிரமிப்பும் அடக்கு முறையும் பிரயோகிக்கப்பட்டு வந்துள்ளது. இவ்வாறு தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டு வந்த சரித்திர ரீதியான தவறுகளுக்கு அர்த்தமுள்ள ஒரு பெறுபேறு கிடைக்கவேண்டும்.
மேலும் நீதி விசாரணை ஒன்றைத் தவிர வேறொன்றையும் நாங்கள் ஏற்கப்போவதில்லை. அத்தோடு OISL அறிக்கையானது சர்வதேச நிதி விசாரணை ஒன்றை நோக்கி எடுத்துச் செல்லப்படவேண்டும்.உள்ளக விசாரணையை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாது. அது ஐ.நா.வின் மேற்பார்வையோடு சர்வதேசத்தின் கண்காணிப்பு என்றாலும் அதனை நாம் ஏற்றுக் கொள்ளமுடியாது.
அத்தோடு தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு ஓர் நிரந்தரமான அர்த்தமுள்ள அரசியல் தீர்வைக் காண்பதற்கு ஐ.நா. நடவடிக்கை எடுக்கவேண்டும். இலங்கை தொடர்பான நீதி விசாரணைகள் ஐ.நா.வின் கட்டுப்பாட்டில் சர்வதேச தரத்திலே குற்றவியல் நீதிமன்றத்தால் அல்லது விசேட தீர்ப்பாயம் ஒன்றின் மூலம் ஒரு தீர்க்கமான முடிவு எட்டப்படவேண்டும்.
இலங்கை அரசாங்கம் மீண்டுமொருமுறை தமிழ் மக்கள் மீது வன்முறையை இனவழிப்பைக் கட்டவிழ்த்து விடுமாயின் அவர்களைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு வசதியாக இலங்கையரசு றோம் உடன்படிக்கையில் கையெழுத்திடவேண்டும். அதற்கு சர்வதேசமும் இலங்கையை வலியுறுத்தவேண்டும். போன்ற விடயங்களை அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியிருப்பதாக அவர் தெரிவித்தார்.








