பொறுப்புக்கூறும் வகையில் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்போம்! யாழ்ப்பாணத்தில் ரணில்
யுத்தத்தின்போது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பொறுப்புக்கூறும் வகையில் உண் மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்களின் காணிகளை மீள வழங்க நடவடிக்கை எடுப்போம். காணாமற்போனோர் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அதற்கும் தீர்வுகாண எமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
யாழ்.மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று யாழ்.நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே
பிரதமர் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்ததாவது,
எமது அரசாங்கம் பதவியேற்று 100 நாட்களுக்குள் பொருட்களின் விலைகளை முழுமையாக குறைத்துள்ளது. இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்த நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். பொதுமக்களின் காணிகளை மீள வழங்குவதற்கு நாம் முன்முயற்சிகளை எடுத்திருக்கின்றோம். வலிகாமம் வடக்குப் பகுதியில் 1000 ஏக்கர் வரையிலான காணிகளை நாம் பொதுமக்களிடம் ஒப்படைத்துள்ளோம். 100 நாட்களுக்குள் நல்லாட்சியை நடத்தியுள்ள நாம் 60 மாதங்களுக்கு ஆணையை கோரி நிற்கின்றோம்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்ட ஆட்சிக்கு ஆணை வழங்குமாறு நான் உங்களிடம் கோருகின்றேன். ஆட்சியில் பங்காளிகளாக மாறினால்தான் அபிவிருத்தியை மேற்கொள்ள முடியும். பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண முடியும்.
செப்ரெம்பர் மாதத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கை வெ ளிவரவுள்ளது. இந்த விடயத்தில் நாம் பொறுப்புக்கூறும் செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டியுள்ளது. யுத்த காலத்தில் காணாமற்போனவர்கள் தொடர்பாக விசாரணையை முன்னெடுத்து அந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டியுள்ளது.
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் விசாரணை செய்து நீதி நிலைநாட்டப் பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடுகளை வழங்க வேண்டியுள்ளது. உயிரிழப்புக்கள் ஈடுசெய்ய முடியாத விடயமாகும். ஆனாலும் நீதி நிலைநாட்டப்பட வேண்டியுள்ளது. இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பொறுப்புக்கூறும் வகையில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்படும்.
யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த சகல மக்களையும் மீளக்குடியேற்ற வேண்டியது எமது கடமையாகும். அதற்கான நடவடிக்கைகளை நாம் எடுப்போம். அதியுயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளுக்குள் உள்ள பொதுமக்களின் காணிகளை மீளவழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வலிகாமம் வடக்கில் ஆயிரம் ஏக்கர் காணிகளை மீள வழங்கியுள்ளோம். பொதுமக்களின் காணிகள் மீள வழங்கப்பட வேண்டும் என்று நான் படையினருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு இந்திய அரசாங்கம் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது. வலிகாமம் வடக்குப் பகுதியில் மீள்குயேற்றப்படும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துகொடுப்போம். மீனவர் துறைமுகம் ஒன்றையும் நாம் யாழ்ப்பாணத்தில் அமைக்கவுள்ளோம். யாழ்.குடாநாட்டில் மிகப்பெரிய பிரச்சினையாகக் காணப்படும் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு தொழில்நுட்ப விஞ்ஞான ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும்.
யாழ்.பல்கலைக்கழகத்தை உலகத் தரம்வாய்ந்த நிறுவனமாக மாற்றுவதற்கு நாம் செயற்படுவோம். தொழில்நுட்ப ரீதியில் தொழில்நுட்ப மையமாக குடாநாட்டை மாற்றுவதற்கும் குளங்களைப் புனரமைப்பதற்கும் எமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். அடுத்த ஐந்து வருடத்தில் 10 இலட்சம் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கவுள்ளோம். இதற்கு வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.
ஊர்வாற்றுறை உட்பட தீவுப் பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் சுற்றுலாத்துறை மையங்களாக அவற்றை மாற்றுவதற்கும் முதலீட்டாளர்களுடன் நாம் பேசி வருகின்றோம். முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரன் படுகொலை செய்யப்பட்ட பின்னர் மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் துணிந்து மக்கள் சேவைக்காக திருமதி விஜயகலா மகேஸ்வரன் அரசியலில் ஈடுபட்டார். துணிச்சலாகச் செயற்படும் அவரை இந்தத் தேர்தலில் நீங்கள் ஆதரித்து பாராளுமன்றம் அனுப்ப வேண்டும்.
பெண்ணுரிமை மற்றும் பெண்களின் நலன்கள் தொடர்பில் அவர் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். இதற்காகவே அவருக்கு மகளிர் விவகார அமைச்சை வழங்கியிருந்தோம். நீங்கள் அவரை இம்முறையும் வெற்றிபெற வைக்க வேண்டும். புதிய அரசாங்கத்தில் அவருக்கு உரிய அமைச்சு வழங்கப்படும்.