கூட்டமைப்பு சமஷ்டி முறைக்கு செல்வதை முதலில் மஹிந்தவே தீர்மானித்தார் - சம்பிக்க
மஹிந்தவே முதலில் நாட்டை பிரிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தார். சமஷ்டி முறைக்கு செல்வதை முதலில் மஹிந்தவே தீர்மானித்தார் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் சமஷ்டி கோரிக்கைக்கு நாம் எந்த சந்தர்ப்பத்திலும் இடம் கொடுக்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார். ஐக்கிய தேசிய முன்னணியினர் நேற்று கொலன்னாவை பிரதேசத்தில் நடத்தியிருந்த மக்கள் கூடத்தில் கலந்துகொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாட்டை இரண்டாக்கும் வேலைத்திட்டத்தை ஐக்கிய தேசிய முன்னணி முன்னெடுத்து செல்வதாக மஹிந்த அணியினர் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த நாட்டை பிரிக்கும் வேலைத்திட்டமானது முதலில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருடன் எப்போதும் ஒட்டிக்கொண்டிருந்த ஜி.எல்.பீரிஸ் ஆகியோரே கொண்டுவந்தனர். அவர்களின் திட்டத்தை நாம் தான் அன்று முழுமையாக முறியடித்தோம். அவ்வாறான நிலையில் இனி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் இந்த நாட்டை இரண்டாக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் இடம் கொடுக்க மாட்டோம்.
நாட்டில் மக்களால் தோற்கடிக்கப்பட்ட மஹிந்த ராஜபக் ஷ தனது அதிகாரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் இனவாத கருத்துக்களை பரப்பி இந்த நாட்டில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பெற்ற ஜனநாயகத்தை இனவாதத்தின் மூலமாக அழிக்க முயற்சிக்கின்றார். அன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டி பற்றி பேசுகையில் மஹிந்த ஒரு கட்டத்தில் அதை ஏற்றுக்கொண்டார். ஆனால் இன்று எம்மீது பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி எம்மை பிரிவினை வாதிகளாக சித்திரிக்க முயற்சிக்கின்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமது சமஷ்டி கோரிக்கையினை 1949 ஆம் ஆண்டே முன்வைத்துவிட்டது. அன்றில் இருந்து கூட்டமைப்பினர் அதிகாரப் பகிர்வு என்ற கனவில் மட்டுமே செயற்பட்டு வருகின்றனர். சமஷ்டி முறைமையை நாட்டில் உருவாக்க வேண்டுமாயின் மக்கள் வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டும். அதேபோல் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவும் அவசியமானதாகும். ஆனால் பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் 15 ஆசனங்கள் அளவிலேயே தன்வசப்படுத்தி வைத்துள்ளனர். ஆகவே இந்த நாட்டில் பிரிவினை என்ற வார்த்தை நாம் இருக்கும் வரையில் ஒருபோதும் நடைமுறைக்கு வராது.
தேர்தலின் பின்னர் எமது முதல் செயற்பாடானது இந்த நாட்டை ஒன்றிணைந்த நாடாக மாற்றுவதேயாகும். அதேபோல் தேர்தல் முறைமையில் மாற்றத்தை கொண்டுவருவது, நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் நிரந்தரமாக ஏற்படுத்துவதாகும். அவ்வாறான நீண்டதொரு வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுத்து வரும் நிலையில் இந்த நாட்டை பிரிக்கும் எந்தவொரு வேலையும் எமது ஆட்சியில் முன்னெடுக்கப்படாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் சமஷ்டி கோரிக்கைக்கு நாம் எந்த சந்தர்ப்பத்திலும் இடம் கொடுக்க மாட்டோம் என அவர் தெரிவித்தார்.