பிரதமர் பதவி எமக்கு வேண்டாம்! சுதந்திரக் கட்சி சிரேஷ்ட உறுப்பினர்கள்
எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெறுமாயின் பிரதமர் பதவி தமக்கு வேண்டாம் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ் உறுப்பினர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளனர். இந்தத் தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் வெற்றிக்காக அளப்பரிய சேவையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு அந்தப் பதவி பொறுத்தமானது என சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
''நிமல் சிறிபால டி சில்வா, ஜோன் செனவிரத்ன, ஷமல் ராஜபக்ஷ, அதாவுட செனவிரத்ன, ஏ.எச்.எம். பெளசி, சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்ஷன யாப்பா போன்ற சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரை இந்த தேர்தலின் பின்னர் பிரதமராக நியமிக்க உங்களது ஒத்துழைப்பு ஆசீர்வாதம் என்பவற்றை மக்கள் முன் காட்டுமாறு நாடு, மக்கள், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பெயரால் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்'' என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவிற்கு அனுப்பிவைத்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையிலேயே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், தமக்கு பிரதமர் பதவி வேண்டாம் என இன்று கூட்டாக அறிவித்துள்ளனர்.








