போர்க்குற்றம் இழைத்த இராணுவத்தினரை பாதுகாக்க நடவடிக்கை
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் இன்று வெளியிடவுள்ள அறிக்கையில், இலங்கைப் படையினர் மீது குற்றம்சுமத்தப்பட்டால், அவர்களைப் பாதுகாப்பதற்காக சட்டவிலக்குரிமை கோரும் சட்டப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப் போவதாக அறிவித்துள்ளார் உதய கம்மன்பில.
பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான, உதய கம்மன்பில, இது தொடர்பாக நேற்று கொழும்பில் செய்தியாளர்களிடம் விபரித்தார்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் இன்று இலங்கை தொடர்பான அறிக்கையை வெளியிடவுள்ளது. இந்த அறிக்கையில், எமது போர் வீரர்கள் மீது குற்றம்சுமத்தப்பட்டால், அவர்களைப் பாதுகாப்பதற்காக- அவர்களுக்கு சட்டவிலக்குரிமை கோரும் தனிநபர் பிரேரணையை (Act of Indemnity) நாடாளுமன்றத்தில் கொண்டு வருவோம்.
நாட்டினையும், சட்டம் ஒழுங்கையும் பேணுவதற்காக நடவடிக்கை எடுத்த அரசாங்க அதிகாரிகளை விசாரணைகளில் இருந்து பாதுகாப்பாற்காக, இந்த சட்டவிலக்குரிமை கோரும் சட்டம், 1700களில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
தமது அதிகாரிகளைப் பாதுகாப்பதற்காக தென்னாபிரிக்காவும், பங்களாதேசும் கூட இந்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளன.இது ஒன்றும் புதிய விடயமல்ல. எமது அதிகாரிகளைப் பாதுகாப்பதற்காக இலங்கையும் மூன்று தடவைகள் இந்தச் சட்டத்தை் நடைமுறைப்படுத்தியுள்ளது.
1915 ஆம் ஆண்டு சிங்கள- முஸ்லிம் இனக்கலவரத்தின் போது, இந்த சட்டம் முதல்முறையாக அப்போதைய அரசவையில் கொண்டு வரப்பட்டது. 1977ஆம் ஆண்டிலும், 1987ஆம் ஆண்டிலும், அரச அதிகாரிகளை எந்த விசாரணைகளில் இருந்தும் பாதுகாப்பதற்காக ஐதேக அரசாங்கத்தினால் இரண்டு முறை இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.
பாதுகாப்புப் படையினர் அமைதியாக இருக்க வேண்டும். அவர்களைப் பாதுகாக்க ரணவிரு சட்ட உதவி அமைப்பு அவர்களைப் பாதுகாக்கத் தயாராக இருக்கிறது” என்றும் அவர் தெரிவித்தார்.








