19 இராஜாங்க, 21 பிரதி அமைச்சர்கள்! அமைச்சர்களின் எண்ணிக்கை 86 ஆக அதிகரித்தது
ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து அமைத்துள்ள கருத்தொருமைவாத தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்வடைந்துள்ளது.
இதுவரை 46 அமைச்சர்களும் 19 இராஜாங்க அமைச்சர்களும் 21 பிரதியமைச்சர்களும் தேசிய அரசாங்கத்தில் பதவியேற்றுள்ளனர். அந்தவகையில் நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மூன்று அமைச்சர்களும் 40 பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் பதவியேற்றனர்.
ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமை 43 அமைச்சர்கள் பதவியேற்றிருந்தனர். அதன்படி தற்போது மொத்தமாக தேசிய அரசாங்கத்தில் 86 பேர் அமைச்சுப் பதவிகளை ஏற்றுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் ஐக்கிய தேசிய கட்சியின் ஒருவரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இருவரும் அமைச்சரவை அமைச்சர்களாக பதவியேற்றனர். அதன்படி மலிக் சமரவிக்ரம சர்வதேச வர்த்தக அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
மேலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பைசர் முஸ்தபா மாகாண சபைகள் உள்ளூராட்சிமன்ற அமைச்சராகவும் விஜித் விஜயமுனி சொய்சா நீர்ப்பாசன அமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டனர்.
அதன் பின்னர் நேற்று பிற்பகல் 2 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 40 பேர் பதவியேற்றுக்கொண்டனர். இராஜாங்க அமைச்சர்களில் ஐக்கிய தேசிய கட்சியின் 12 பேர் இராஜாங்க அமைச்சர்களாகவும் சுதந்திரக் கட்சியின் 7 பேர் இராஜாங்க அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இராஜாங்க அமைச்சர்கள்
குறிப்பாக இராஜாங்க அமைச்சர்களை பொறுத்தவரை ஐக்கிய தேசிய கட்சியின் ருவன் விஜயவர்த்தன பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றிய நிலையில் இம்முறையும் அதே இராஜாங்க அமைச்சை அவர் பொறுப்பேற்றுள்ளார். அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் சிறுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
வி.இராதாகிருஷ்ணன் கல்வி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த அரசாங்கத்திலும் கல்வி இராஜாங்க அமைச்சராக செயற்பட்டிருந்தார்.லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன நிதி இராஜாங்க அமைச்சராகவும் சுஜீவ சேனசிங்க வெளிநாட்டு வர்த்தக இராஜாங்க அமைச்சராகவும் எம்.எச். ஹிஸ்புல்லா மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் ஏ.எச்.எம்.பௌஸி தேசிய ஒருமைப்பாட்டு இராஜாங்க அமைச்சராகவும் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே நீர்வழங்கல் நீர் விநியோக இராஜாங்க அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். பாலித்த ரங்கேபண்டார தொழிற்பயிற்சி இராஜாங்க அமைச்சராகவும் நிரோஷன் பெரெரா கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார்.
பிரதி அமைச்சர்கள்
பிரதியமைச்சர்களை பொறுத்தவரை 21 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 09 பேரும் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த 12 பேரும் பிரதியமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த பைசல் ஹாஸிம் சுகாதார பிரதி அமைச்சராகவும் எச்.எம்.ஹரீஸ் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் தயாகமகேவின் பாரியாரான அனோமா கமகே பொற்றோலியம் வளத்துறை பிரதி அமைச்சராக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதி வெளிவிவகார அமைச்சராக செயற்பட்ட அஜித் பி. பெரெரா இம்முறை மின்சக்தி பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹர்ஷ வெ ளிவிவகாரத்துக்கு
புதிய பிரதி வெளிவிவகார அமைச்சராக ஹர்ஷ டி. சில்வா பொறுப்பேற்றுள்ளார். கருணாரட்ன பரணவிதான மாகாண சபைகள் உள்ளூராட்சிமன்ற பிரதியமைச்சராகவும் எரான் விக்ரமரட்ன அரச தொழில்வாய்ப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமீர் அலி கிராமிய பொருளாதார பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி நேற்றைய தினம் 40 பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டுள்ளனர்.
46 பேர் அமைச்சரவையில்
இந்நிலையில் அமைச்சரவை அமைச்சர்களாக இதுவரை 46 பேர் பதவியேற்றுக்கொண்டுள்ளனர். 33 பேர் ஐக்கிய தேசிய முன்னணிணியின் சார்பிலும் 13 பேர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பிலும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய தேசிய முன்னணியின் 33 அமைச்சுப் பதவிகளில் முஸ்லிம் காங்கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஜாதிக ஹெல உறுமய கட்சிகளுக்கான அமைச்சுப் பதவிகளும் உள்ளடங்குகின்றன.
இராஜாங்க அமைச்சர்களில் சுதந்திரக் கட்சியை சேர்ந்த 7 பேரும் ஐக்கிய தேசிய கட்சியின் 12 பேரும் இராஜாங்க அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.
பிரதியமைச்சர்களை பொறுத்தவரை ஐக்கிய தேசிய கட்சியின் 12பேரும் சுதந்திரக் கட்சியின் 09 பேரும் பதவியேற்றுள்ளனர்.
2 அமைச்சர்கள் பதவியேற்பர்
மேலும் இரண்டு அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அந்த இரண்டு பதவிகளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
5 பிரதி அமைச்சர்கள் வருவர்
அத்துடன் மேலும் ஐந்து பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவிகள் நியமிக்கப்படவுள்ளன.
நடந்து முடிந்த 8 ஆவது பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி 106 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 95 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டது. இந்நிலையில் இரண்டு கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கப் போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் வெற்றிபற்றதும் அறிவித்தார்.
அதனை அடுத்து இரண்டு வருடங்களுக்கு தேசிய அரசாங்கத்தை அமைத்துக் கொள்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் ஐக்கிய தேசியக்கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் கைச்சாத்திட்டது. எனினும் உடனடியாக தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவையினால் பதவியேற்க முடியாமல் போனது. அமைச்சுப் பதவிகளை பகிர்ந்து கொள்வதிலும், தேசிய அரசாங்கத்தின் பொறுப்புக்களை பகிர்வதிலும் நிலவி வந்த இழுபறி நிலை காரணமாக அமைச்சரவைப் பதவியேற்பு தொடர்ந்து இழுபறி நிலை காணப்பட்டது.
இந்நிலையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பயனாக இறுதியில் அமைச்சுப் பதவி பகிர்வு தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை 42 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். அதற்கு முன்னர் வெ ளிவிவகார அமைச்சராக மங்கள சமரவீர பொறுப்பேற்றிருந்தார்.
தற்போது மேலும் மூன்று அமைச்சரவை அமைச்சர்களும் 40 பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் நேற்று பதவியேற்றுள்ளனர். அதன்படி மொத்தமாக ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்துள்ள தேசிய அரசாங்கத்தில் 86 பேர் அமைச்சுப் பதவிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.








