Breaking News

சந்திரிக்காவும் போர்க் குற்றவாளியே! அனந்தி குற்றச்சாட்டு

நல்லாட்சி எனக் கூறிக்கொண்டு சமாதானப் புறாவாக வலம் வருகின்ற முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் போர்க் குற்றவாளி தான் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கிளிநொச்சியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நடை பயணம் நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தை சென்றடைந்து நிறைவு பெற்றது.இந்த நிலையில் இந்தப் பேரணியில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா அரசின் உள்நாட்டுப் பொறிமுறை பலவற்றிலும் நான் தோற்றியிருக்கின்றேன். போர் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்த நிலையிலும் உள்நாட்டுப் பொறிமுறை மூலமாக எதுவும் இடம்பெறவில்லை.

எந்தவித முடிவுகளும் எட்டப்படவில்லை. எங்கிருந்தும் ஆறுதல் கிடைக்கவில்லை.இந்த நிலையிலையே சர்வதேச விசாரணையைக் கோரியிருக்கின்றோம். இந்த விசாரணையைக் கோருகின்ற ஐ.நாவிலேயெ நான் கடந்த வருடம் எமது பிரச்சினைகளைத் தெரிவித்து அதற்காக நீதியைக் கோரி உரையாற்றியிருக்கின்றேன்.

ஆனால் இன்று வரை ஸ்ரீலங்கா அரசின் போர்க்குற்றம் தொடர்பில் எதனையுமே வெளிப்படுத்தாமலேயே ஐ.நா சபை இயங்கிக் கொண்டிருக்கின்றது.இருந்தபோதும் எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியைப் பெற்றுக் கொள்வதற்காக நாங்கள் உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்து சர்வதேச பொறிமுறையை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் தற்போது உள்ளக விசாரணை தொடர்பில் பேசப்படுகின்றது. அதில் எமக்கு நம்பிக்கை இல்லை.கால இழுத்தடிப்பிற்கான வேலை என்பதனையும் நியாயம் கிடைக்காது என்பதனையும் நாம் இந்த சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்கின்றோம்.அந்த வகையில் எமக்கான நீதியைக் கோரி நடைபவனிப் போராட்டத்தை மேற்கொண்டிருக்கின்றோம். இந்தப் போராட்டம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த போது செம்மணியில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தோம்.

இந்தப் படுகொலைகளைச் செய்தவர் இன்று சமாதானப் புறாவாக நல்லாட்சித் தத்துவமாக சுற்றித் திரிகின்ற முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா அம்மையாரே. இவரையும் ஒரு போர்க் குற்றவாளியாகத் தான் நாம் கருதுகின்றோம்.இந்த சந்திரிக்கா அம்மையாரும் ரணில் விக்கிரமசிங்கவும் மிக திறமையானவர்கள் என்று மேற்குலகம் இன்றும் கருதுகின்றது.

ஆனால் இவர்கள் எல்லோருமே இன அழிப்பில் ஈடுபட்டவர்களாகவே நாம் பார்க்கின்றோம். ஏனெனில் வரலாறு அவ்வாறே இருக்கின்றது. இதனால் நாம் வரலாற்றை மறந்துவிடவில்லை என்பதனைச் சொல்லிக் கொள்கிறோம்.

இதனை ஐ.நாவோ சர்வதேசமோ விளங்கிக் கொள்ள வேண்டும். காலங் காலமாக ஸ்ரீலங்கா சுதந்திரமடைந்த காலம் முதல் நாங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.எனவே இந்த உள்நாட்டுப் பொறிமுறை என்ற பொய்ப்பேச்சுக்களால் சர்வதேச விசாரணையை முடக்குவதன் ஊடாக எங்களை அழித்தவர்கள் தப்பிக் கொள்ளப்பார்க்கின்றனர்.

எனவே நாம் இப்போதும் கேட்கின்றோம் தமிழ் நாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும் எமக்கு ஆதரவான குரல்களை கொடுங்கள்.அந்த வகையில் எமக்கு ஆதரவான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இதனால் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவுத் தளம் பெருகிவருகின்றது. நிச்சயமாக சர்வதேச விசாரணையொன்று மேற்கொள்ளப்பட்டு அதனூடாக நீதி கிடைக்க வேண்டும். இதுவே அனைத்து மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

இந்தப் போராட்டத்தை நாம் மேற்கொண்ட போது பல அச்சுறுத்தல்கள் தடைகள் எற்படுத்தப்பட்ட போதும் அவற்றையெல்லாம் தாண்டி எமக்கான நீதி வேண்டிய போராட்டத்தை தொடர்ந்திருக்கின்றோம்.இவ்வாறு நாம் அச்சுறுத்தி மிரட்டப்படுவதா நல்லாட்சித் தத்துவம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.