Breaking News

உள்­ளக விசா­ரணை பொறி­முறை குறித்து ஐ.நா.வுக்கு விளக்­க­ம­ளிக்­க­வுள்ளது இலங்கை

ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 30 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் 14 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் இலங்­கையின் சார்பில் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தலை­மை­யி­லான உயர்­மட்டக் குழு­வினர் கலந்­து­கொள்­ள­வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அத்­துடன், நீதி­ய­மைச்சர் விஜய­தாஸ ராஜ­ப­க்ஷவும் சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் அதி­கா­ரி­களும் வெளி­வி­வ­கார அமைச்சின் உயர் அதி­கா­ரி­களும் ஜெனிவாக் கூட்டத்தொடரில் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். இவர்­க­ளுடன் ஜெனி­வாவில் உள்ள இலங்கை வதி­விட பிர­தி­நிதி ரவி­நாத ஆரி­ய­சிங்க தலை­மை­யி­லான அதி­கா­ரி­களும் இணைந்­து­கொள்­ள­வுள்­ளனர். மேலும் முதல் நாள் அமர்­வின்­போது உரை­யாற்­ற­வுள்ள

ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் ஐக்­கிய நாடுகள் பொதுச் செயலர் பான் கீ மூன் உள்­ளிட்­ட­வர்கள் இலங்கை குறித்து பிரஸ்­தா­பிக்­க­வுள்­ளனர். அத்­துடன் அன்­றைய தினம் அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவும் உரை­யாற்­ற­வுள்ளார்.

இல­ங­கையில் இடம்­பெற்­றுள்­ள­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்­கையின் புதிய அர­சாங்கம் மேற்­கொள்­ள­வுள்ள உள்­ளக விசா­ரணை பொறி­முறை தொடர்­பா­கவும் இதன்­போது அமைச்சர் மங்­கள சம­ர­வீர விளக்­க­ம­ளிப்பார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இது இவ்­வாறு இருக்க இலங்கை குறித்து ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­லகம் நடத்­திய விசா­ர­ணையின் அறிக்கை மனித உரிமை பேர­வைக்கு இம்­முறை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­துடன் எதிர்­வரும் 30 ஆம் திகதி மனித உரிமை பேர­வையில் அது தொடர்பில் விசா­ர­ணையும் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

அந்த விவா­தத்தில் அமெ­ரிக்கா, பிரிட்டன், சீனா, ரஷ்யா, ஜப்பான், தென்­னா­பி­ரிக்கா, இந்­தியா உள்­ளிட்ட நாடுகள் கலந்­து­கொண்டு உரை­யாற்­ற­வுள்­ளன. விவா­தத்தின் இறு­தியில் இலங்­கையின் சார்பில் அமைச்சர் மட்­டத்தில் ஒருவர் பதி­ல­ளிப்பார் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

மேலும் இம்­முறை வழ­மைக்கு மாறாக இலங்­கைக்கு ஆத­ர­வாக பிரே­ரணை ஒன்றை கொண்­டு­வ­ரு­வ­தற்கு அமெ­ரிக்கா தீர்­மா­னித்­துள்­ளது. மனித உரிமை விவ­கா­ரங்­களில் முன்­னேற்­றத்தை வெளிக்­காட்டும் நோக்கில் உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையை முன்­னெ­டுப்­ப­தற்கு இலங்­கைக்கு போதிய கால அவ­காசம் ஒன்றை வழங்­க­வேண்டும் என்ற நோக்கில் இந்த பிரே­ர­ணையை அமெ­ரிக்கா கொண்­டு­வ­ர­வுள்­ளது.

அது மட்­டு­மன்றி அமெ­ரிக்கா இலங்­கைக்கு ஆத­ர­வாக பிரே­ரணை ஒன்றை கொண்­டு­வ­ர­வுள்­ளமை தொடர்பில் உறுப்பு நாடு­களின் ஆத­ரவை பெறும் நோக்கில் விசேட உப­குழுக் கூட்டம் ஒன்றை நடத்­து­வ­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவை அலு­வ­ல­கத்தில் இந்த விசேட உப­குழுக் கூட்டம் நடை­பெ­ற­வுள்­ள­துடன் இதில் கலந்­து­கொள்­ளு­மாறு மனித உரிமை பேர­வையின் உறுப்பு நாடு­க­ளுக்கும் சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளுக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இதன்­போது அமெ­ரிக்கா ஏன் இலங்­கைக்கு ஆத­ர­வாக பிரே­ரணை கொண்­டு­வ­ரு­கின்­றது என்­ப­தற்­கான விளக்கம் அளிக்­கப்­ப­ட­வுள்­ள­துடன் அதற்கு ஆத­ரவு வழங்­கு­மாறு கோரிக்­கையும் விடுக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இதற்கு முன்னர் கடந்த 2012 ஆம் ஆண்டு இலங்­கைக்கு எதி­ராக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் இலங்­கைக்கு எதி­ராக அமெ­ரிக்­கா­வினால் ஒரு பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­டது. அந்த பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக 26 நாடு­களும் எதி­ராக 15 நாடு­களும் வாக்­க­ளித்­தன. 8 நாடுகள் நடு­நிலை வகித்­தன.

கடந்த 2013 ஆம் ஆண்­டிலும் இலங்­கைக்கு எதி­ராக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் அமெ­ரிக்கா ஒரு பிரே­ர­ணையை கொண்­டு­வந்து நிறை­வேற்­றி­யது. இந்த பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக 31 நாடு­களும் எதி­ராக 15 நாடு­களும் வாக்­க­ளித்­தன. ஒரு நாடு நடு­நிலை வகித்­தது. அத்­துடன் கடந்த 2014 ஆம் ஆண்டும் அமெ­ரிக்கா இலங்­கைக்கு எதி­ராக ஒரு பிரே­ர­ணையை கொண்டு வந்­தது.

இந்த இரண்டு பிரே­ர­ணை­க­ளிலும் இலங்­கையில் இடம்­பெற்­றுள்­ள­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் நம்­ப­க­ர­மான உள்­ளக விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும் என்று கோரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் 2014 ஆம் ஆண்டு இலங்­கைக்கு எதி­ராக அமெ­ரிக்­கா­வினால் கொண்­டு­வ­ரப்­பட்ட பிரே­ர­ணையில் போர்க் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­லகம் விசா­ரணை நடத்­த­வேண்டும் என்று கோரப்­பட்­டி­ருந்­தது.

இலங்­கையில் பொறுப்­புக்­கூ­ற­லையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஊக்­கு­வித்தல் என்ற தலைப்­பி­லான இந்தப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக 23 நாடு­களும் பிரே­ர­ணையை எதிர்த்து 12 நாடு­களும் வாக்­க­ளித்­தன. அத்­துடன் 12 நாடுகள் வாக்­க­ளிப்பில் கலந்­து­கொள்­ளாமல் நடு­நிலை வகித்­தி­ருந்­தன

இந்­நி­லையில் 2014 ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்ட பிரே­ர­ணைக்கு அமை­வா­கவே இலங்கை தொடர்­பான உள்­ளக விசா­ர­ணையை ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­லகம் முன்­னெ­டுத்­தது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை மாத­ம­ளவில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் விசா­ரணை செயற்­பா­டுகள் செயற்­பாட்டு ரீதி­யாக ஆரம்­பிக்­கப்­பட்­டன. இதற்­காக 12 பேர் கொண்ட விசா­ரணைக் குழு நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தது. ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­ல­கத்தின் இந்த விசா­ரணைக் குழு­வுக்கு ஆலோ­சனை வழங்கும் நோக்கில் மூன்று விசேட நிபு­ணர்கள் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

நல்­லி­ணக்க ஆணைக்­குழு கவனம் செலுத்­திய காலப் பகு­தியில் இலங்­கையில் இரு­த­ரப்­பி­ன­ராலும் இழைக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­படும் குற்­றங்கள் மற்றும் மோச­மான மனித உரிமை மீறல்கள், துஷ்­பி­ர­யோ­கங்கள் தொடர்­பாக ஐ.நா. மனித உரிமை அலு­வ­லகம் விரி­வான சுதந்­தி­ர­மான விசா­ர­ணையை மேற்­கொள்ள வேண்டும் என்று பிரே­ர­ணையில் கோரப்­பட்­டி­ருந்­தது.

அதற்­க­மைய 2014 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­தியே ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் அலு­வ­ல­கத்தின் இலங்கை விவ­காரம் குறித்த விசா­ரணை செயற்­பாட்டு காலப்­ப­கு­தி­யாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் கடந்த ஜன­வரி மாதம் ஆகும்­போது விசா­ரணை அறிக்கை தயார் செய்­யப்­படும் என்று கூறப்­பட்­டி­ருந்­தது.

ஐ.நா. மனித உரிமை அலு­வ­லகம் இலங்கை குறித்த விசா­ர­ணையை முடித்­தி­ருந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் நடை­பெற்ற ஐக்­கிய நாடு­களின் 28 ஆவது கூட்டத் தொடரில் இந்த அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வி­ருந்­தது. எனினும் இலங்­கையின் ஆறு­மாத கால நல்­லாட்சி அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய அந்த அறிக்கை பிற்போடப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் மனித உரிமை பேரவையின் தலைவருக்கு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே இலங்கை குறித்த அறிக்கை செப்ம்டெம்பர் மாதத்துக்கு பிற்போடப்பட்டது. ஆனால் செப்டெம்பர் மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை அலுவலகத்தின் 30 ஆவது கூட்டத் தொடரில் இந்த அறிக்கை கட்டாயம் சமர்ப்பிக்கப்படும் என கூறப்பட்டது.

அந்தவகையில் இந்த விசாரணை அறிக்கை தொடர்பில் எதிர்வரும 30 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை பேரவையில் விவாதம் நடத்தப்படவுள்ள நிலையில் சில தினங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கையளிக்கப்படவுள்ளது.