கலாசாரத்தை உலகுக்கு கற்றுக் கொடுத்தவர்கள் யாழ்.மக்கள் : வடக்கு முதலமைச்சர்
கலாசாரத்தை உலகுக்கு கற்றுக் கொடுத்து, பண்பாட்டிற்கு வரைவிலக்கணமாக வாழந்தவர்கள் யாழ். மக்கள் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், யாழ். மாவட்ட கலை கலாசாரப் பேரவையும், யாழ். மாவட்டச் செயலகமும் இணைந்து நடாத்தும் பண்பாட்டு பெருவிழா யாழ்.மாவட்ட செயலாளர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
தற்போதைய சமூகமும், எதிர்க்கால தமிழ்ச் சமூகமும் பண்பாட்டு மரபுகளை பேணி, போற்றக் கூடிய சமூகமாக வாழ வேண்டும். நாம் நம் பண்பாட்டிலிருந்து விட்டுக் கொடுக்கும் விடயங்கள் யாவும் எம் இனத்தின் இருப்பை விட்டுக் கொடுப்பதற்கு சமமாகும்.
எனினும், சாராம்சம் அழியாது அடிப்படைத் தவறாது நாம் முன்னேற பழகிக் கொள்ள வேண்டும். காலத்திற்கு ஏற்ப பண்பாடு மாற்றமடைவது தவறல்ல. எனினும் அம்மாற்றம் ஆரோக்கியமானதாக அமைய வேண்டும் எனவும் முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.








