வெளிநாட்டு பங்களிப்பை வலியுறுத்தும் பிரேரணை
இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமையில் வெளிநாட்டு நீதிவான்கள், விசாரணையாளர்கள் மற்றும் சட்டத்தரணிகளின் பங்களிப்பினை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றபபட்டுள்ள பிரேரணை வலியுறுத்தியுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையானது இலங்கையின் முயற்சிகளை பறைசாற்றுவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கடந்த முதலாம் திகதி நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பில் இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையானது இலங்கையின் முயற்சிகளை பறைசாற்றுகின்றது. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நல்லாட்சியை ஏற்படுத்தல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் தொடர்பில் புதிய அரசாங்கம் கரிசனை காட்டி வருகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா தொடர்ச்சியாக சிறந்த பங்களிப்பினை வழங்கும். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானம், உள்நாட்டு சட்டங்களில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பாகவும் வலியுறுத்தியுள்ளது.
சிவில் யுத்தத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்கும் வகையில் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டுமெனவும் பிரேரணை வலியுறுத்தியுள்ளது. அது மட்டுமன்றி மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமையில் வெளிநாட்டு நீதவான்கள், விசாரணைகள் மற்றும் சட்டத்தரணிகளின் பங்களிப்பினை பிரேரணை வலியுறுத்தியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த முதலாம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் சட்டத்தரணிகள் விசாரணையாளர்களைக்கொண்டு இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து பேச்சுநடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.








