முள்ளியவளையில் சட்டவிரோத குடியேற்றம்! அமைச்சர் ஒருவர் உடந்தை
முல்லைத்தீவு நகரை அண்மித்த முள்ளியவளை பகுதியில் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் காடுகள் சத்தமின்றி அழிக்கப்பட்டு அந்த அடங்களில் வெளி மாவடடங்களில் இருந்து அழைத்து வரப்பட்டு மக்கள் சட்டவிரோதமாக குடியேற்றப்பட்டு வருகின்றனர்.
அமைச்சர் ஒருவரின் ஆசியுடன் இவ்வாறு பெருந்தொகை காடு அழிக்கப்பட்டு சட்டவிரோதக் குடியேற்றம் இடம்பெற்று வருகின்ற போதும் இதுவரை எவரும் இதனைக் கண்டுகொள்ளவில்லை.
வனவள திணைக்களம், சுற்றாடல் அபிவிருத்தி திணைக்களம், காணி திணைக்களம் என எந்தவிதத் தரப்பினரிடமிருந்தும் இந்த காடழிப்பு மற்றும் குடியேற்றம் தொடர்பில் அனுமதி பெறப்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
முள்ளியவளையிலிருந்து குமுழமுனை செல்லும் வீதியில், குமாரபுரம் என்னும் பகுதியின் கிழக்கு எல்லையில் இவ்வாறு மிக வேகமாக காடழிப்பு இடம்பெறுகின்றது.
குறித்த வீதியிலிருந்து சுமார் ஒன்றரைக் கிலோமீற்றர் தூரத்தில் இதுவரை கிட்டத்தட்ட 600 ஏக்கர்கள் வரையில் காடழிப்பு நடந்துள்ளது. காடழிக்கப்பட்ட நிலம் தனிநபர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டள்ளது. வேலிகளும், கிடுகினால் ஆன வீடுகளும் அமைத்திருக்கிறார்கள். சிலர் நிரந்தர வீடுகளை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
25 ஏக்கர், 30 ஏக்கர் என சிலர் பிரித்து பெரியளவு தோட்டங்களையும் செய்யத் தொடங்கியிருக்கின்றனர். தென்னை, வாழை, மா என நிரந்தரப் பயிர்களும் நடுகை செய்யப்பட்டிருக்கின்றன. கிணறுகளும், கட்டடங்களும் விரைவாகக் கட்டப்படுவதையும் அவதானிக்க முடிகிறது.
வன்னியன்மேட்டின் மறுகரையில் இருக்கின்ற உப்புமாவெளி, தங்கபுரம் கிராமங்களின் எல்லை வரை இந்தக் காடழிப்பு சென்று விட்டதாக பிரதேசவாசிகள் கூறுகின்றனர். இதனைத் தடுக்க வலியுறுத்தி அரச அதிகாரிகளிடம் முறையிட்ட போதும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.
மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்ட நாள்முதல் சிறிது சிறிதாக சத்தமின்றி இவ்வாறு காடழிக்கப்பட்டு வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அமைச்சர் ஒருவரின் துணையுடன் இங்கு குடியேற்றப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சட்டவிரோதமாகக் காடழிக்கும் போதும், காணி தொடர்பான சட்டங்களை மீறி காணியைக் கையகப்படுத்தும் போதும் அரச அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுப்பதே வழமை. ஆனால் இந்த விடயத்தில் முல்லைத்தீவு கச்சேரி, கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தை சேர்ந்த அதிகாரிகள் தம்மால் நடவடிக்கை எடுக்க முடியாதென கைவிரித்து விட்டதாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிக்குள் நடக்கும் சட்டவிரோத காணி பிடிப்பு நடவடிக்கைகளை எதிர்த்தால், அதனை உரிய இடங்களுக்கு அறிவித்தால் தமக்கு உடனடி இடமாற்றம் கிடைக்கும் என அதிகாரிகள் அஞ்சுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் கடந்த 6 ஆண்டுகளில் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் பணியாற்றிய பிரதேச செயலாளர்கள் ஐவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தை சேர்ந்த அதிகாரிகள் காடழிப்பைத் தடுக்க பல தடவைகள் முயன்ற போதும் அவர்கள் அச்சுறுத்திப் பணிய வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.
கடந்த வருடம் முள்ளியவளையிலிருந்து ஒட்டுசுட்டான் செல்லும் வீதியில் இதேபோன்று பாரிய காடழிப்பு இடம்பெற்றது. குறித்த வீதியின் ஓரமாக விடுதலைப் புலிகள் நடுகை செய்திருந்த பல நூறு ஏக்கர் அளவிலாக தேக்க மரத் தோட்டம் மற்றும் பாதுகாக்கப்பட்ட 850 ஏக்கர் வரையான காடுகள் உட்பட பெரும்பகுதி அழிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் ஒன்றை மக்கள் முன்னெடுத்திருந்தனர்.
பொய்யான கடிதங்களையும், பொறுப்பற்ற அதிகாரிகளின் அனுமதியுடனும் இந்தத் திடீர் காடழிப்பு நடந்தது. மக்கள் சுயமாகக் கிளர்ந்தெழுந்து, இரவிரவவாகக் காடழிப்பு இயந்திரங்களுக்கு முன்னால் படுத்துக் கிடந்து போராட்டம் நடத்தினர்.
அதன் பின்னரே இராணுவம் குறித்த காடழிப்புக் களத்துக்கு வருகை தந்து, சம்வத்தை கொழும்புக்கு அறிவித்து, தடுத்து நிறுத்தியது. இந்த நிலையிலேயே முள்ளியவளையின் கிழக்குப் பக்கமாக இருக்கும் வன்னியன்மேட்டுக் காடும் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகிறது.
பாரிய அளவில் காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு திட்டமிட்ட குடியேற்றம் இடம்பெற்றுவரும் நிலையில் இதனைத் தடுத்து நிறுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







