அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி வெள்ளியன்று நல்லூரில் போராட்டம்
நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி எதிர்வரும் வெள்ளியன்று யாழ்ப்பாணம் நல்லூரில் பாரிய கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
சிவில் அமைப்புக்கள் ஏற்பாடு செய்துள்ள இப்போராட்டத்தில் அரசியல் கைதிகளின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், மதகுருமார்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரியவருகின்றது.
பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்று முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளனர்.
இந்நிலையில் அவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையிலேயே இப்பாரிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்போது அரசியல் கைதிகளின் கோரிக்கைக்கு நியாயமான தீர்வு வழங்கப்படவேண்டும் , பொது மன்னிப்பளித்து அவர்கள் உடன் விடுதலை செய்யப்படவேண்டும் என்பது வலுவாக வலியுறுத்தப் படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








