Breaking News

அரசு வாக்குறுதியை நிறைவேற்ற தவறியமை ஏமாற்றமளிக்கிறது - மாவை கண்டனம்

தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்கு விடு­தலை அளிப்­பது தொடர்­பாக அர­சாங்கம் எமக்கு அளித்த வாக்­கு­று­தியை நிறை­வேற்ற தவ­றி­யமை ஏமாற்றம் அளிப்­ப­தாக தெரி­வித்­துள்ள தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா, ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வைக்கு அளித்த வாக்­கு­று­திக்கு அமை­வாக பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை உடன் நீக்க வேண்டும் எனவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

நேற்­று­முன்­தினம் தமிழ் அர­சியல் கைதிகள் 31 பேருக்கு சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் மூலம் மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்ட நகர்த்தல் பிரே­ர­ணையை அடுத்து வழங்­கப்­பட்ட பிணை அனு­மதி மற்றும் 10 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான ஆட்­பிணை நிபந்­தனை தொடர்­பிலும் சிறைச்­சா­லை­களில் தொடர்ந்தும் உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் கைதி­களின் விடு­தலை தொடர்­பிலும் கொழும்பு ஊடகம் ஒன்று வின­வி­ய­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் இவ்­வி­டயம் தொடர்பில் மேலும் தெரி­விக்­கையில்,

மிகக் கொடூ­ர­மான ஜன­நா­யக விரோத சட்­ட­மாகக் கரு­தப்­படும் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கைது­செய்­யப்­பட்­ட­வர்கள் நாட­ளா­விய ரீதியில் உள்ள சிறைச்­சா­லை­களில் நீண்­ட­கா­ல­மாகத் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றனர். இவர்­களின் விடு­தலை தொடர்­பாக நாம் ஆட்­சி­யி­லுள்ள அர­சாங்கத் தரப்­பி­ன­ரி­டமும் சர்­வ­தே­சத்­தி­டமும் பல்­வேறு தரு­ணங்­களில் வலி­யு­றுத்­தல்­களை செய்­தி­ருந்தோம்.

எனினும் கடந்­த­கால ஆட்­சி­யா­ளர்கள் விடு­த­லை­ய­ளிப்­ப­தாக வாக்­கு­று­தி­களை வழங்­கி­ய­போதும் அது தொடர்பில் எந்­த­வி­த­மான ஆக்­க­பூர்­வ­மான செயற்­பா­டு­க­ளையும் முன்­னெ­டுக்­க­வில்லை.

தமிழ் மக்­களை அடக்கி ஒடுக்கி இரண்­டாம்­தரப் பிர­ஜை­க­ளாக நடத்த முனைந்த சர்­வா­தி­கார ஆட்­சி­யொன்று கடந்த ஜன­வரி 8ஆம் திகதி சிறு­பான்மை மக்­களின் பங்­க­ளிப்­புடன் அகற்­றப்­பட்­டது.அதன் பின்னர் ஏப்ரல் மாதம் நடை­பெற்ற பொதுத் தேர்­த­லின்­போதும் புதிய ஆட்­சி­யொன்று உரு­வா­கி­யது. வட, கிழக்கு மக்­களின் ஆணை பெற்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எதிர்க்­கட்­சி­யாக பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்­கின்­றது.

ஐக்­கிய இலங்­கைக்குள் தீர்­வொன்றைப் பெற்­றுக்­கொள்ள வேண்டும் என்­ப­தற்­கா­கவும் எமது மக்­களின் கோரிக்­கைகள் நிறை­வேற்­றப்­பட வேண்டும் என்­ப­தற்­கா­கவும் நாம் தொடர்ச்­சி­யாக குரல்­கொ­டுத்து வரு­கின்றோம். அதே­நேரம் கடந்த அர­சி­லி­ருந்து புதிய அர­சாங்­கத்தின் அணு­கு­மு­றைகள் மாறு­பட்­டி­ருக்­கின்­றன.

இவ்­வா­றான நிலையில் தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் நாம் அழுத்­தங்­களை பிர­யோ­கித்து வந்தோம். எனினும் அர­சாங்­கத்தின் கால­தா­ம­த­மான செயற்­பா­டுகள் கார­ண­மாக தமிழ் அர­சியல் கைதிகள் தமது விடு­த­லையை வலி­யு­றுத்தி கடந்த மாதம் 12ஆம் திகதி உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை ஆரம்­பித்­தி­ருந்­தனர்.

அதனைத் தொடர்ந்து அவர்­களின் கோரிக்­கை­களை அர­சாங்கத் தரப்­பி­ன­ரிடம் தெரி­வித்து அவர்­களின் விடு­த­லையை நாம் வலி­யு­றுத்­தி­யி­ருந்தோம்.

அதன் பல­னாக ஒக்­டோபர் 31ஆம் திகதி முதல் உரிய பொறி­மு­றைகள் ஊடாக நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு நவம்பர் 7ஆம் திக­திக்கு முன்­ன­தாக அர­சியல் கைதிகள் விட­யத்­திற்கு நிரந்­தர தீர்வு வழங்­கு­வ­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாஸ முன்­னி­லையில் கூட்­ட­மைப்பின் தலை­மை­யிடம் உத்­த­ர­வாதம் அளித்­தி­ருந்தார். இத­னை­ய­டுத்து எமது தலைவர் சிறைச்­சா­லைக்கு நேர­டி­யாகச் சென்று அந்த உத்­த­ர­வா­தத்தை கைதி­க­ளுக்கு தெரி­வித்து உண்­ணா­வி­ர­தத்தை நிறுத்­தி­யி­ருந்தார்.

அதனைத் தொடர்ந்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உள்­ளிட்ட அர­சாங்­கத்தின் உயர்­மட்ட தரப்­பி­னரை தனித்­த­னி­யாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் தலை­மை­யி­லான குழு­வினர் சந்­தித்து கைதி­களின் விடு­தலை தொடர்­பாக வலி­யு­றுத்­தினோம்.

இதன்­போது தீபா­வ­ளிக்கு முன்­ன­தாக 30 பேருக்கு பிணை­ய­ளிப்­ப­தா­கவும் 20 ஆம் திக­திக்கு முன்­ன­தாக 32 பேருக்கு பிணை வழங்­கு­வ­தா­கவும் ஏனையோர் தொடர்பில் அமைச்­ச­ரவைக் குழு­வொன்றை நிய­மித்து சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்­தோடு இணைந்து நட­வ­டிக்கை எடுப்­ப­தா­கவும் உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டது.

அத்­துடன் குற்­ற­வா­ளி­க­ளாக இனங்­கா­ணப்­பட்டு தண்­ட­னை­ய­ளிக்­கப்­பட்ட 48 பேருக்கும் பொதுமன்­னிப்­ப­ளிப்­பது தொடர்பில் ஜனா­தி­ப­தி­யிடம் வலி­யு­றுத்­தி­யி­ருந்தோம். அதன்­போது ஒரு சில நாட்­களில் அது தொடர்­பி­லான தீர்­மா­னத்தை அறி­விப்­ப­தாக ஜனா­தி­பதி குறிப்­பிட்­டி­ருந்தார். எனினும் விடு­தலை தொடர்­பான நட­வ­டிக்­கை­கள் ஆக்­க­பூர்­வ­மாக அமை­யா­ததன் விளை­வாக அர­சியல் கைதிகள் கடந்த 8ஆம் திகதி முதல் இடை­நி­றுத்­தி­யி­ருந்த சாகும்­வ­ரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை மீண்டும் ஆரம்­பித்­தி­ருந்­தனர்.

ஏமாற்றம்

இந்­நி­லையில் இவர்­களின் விடு­தலை தொடர்­பாக நாம் ஜனா­தி­பதி, பிர­தமர் உள்­ளிட்ட அர­சாங்க உயர்­மட்டத் தரப்­பி­ன­ருடன் பல்­வே­று­பட்ட வழி­களில் பேச்­சுக்­களை நடத்­தினோம். தீபா­வ­ளிக்கு முன்­ன­தாக ஒரு தொகு­தி­யினர் விடு­விக்­கப்­ப­டு­வார்கள் என கூறப்­பட்­ட­போதும் அச்­செ­யற்­பாடு நடை­பெற்­றி­ருக்­க­வில்லை. நேற்­றைய தினம் முதற்­கட்­ட­மாக ஒரு தொகு­தி­யினர் விடு­தலை செய்­யப்­ப­டு­வார்கள்.

அவர்­க­ளுக்­கான பிணை அனு­மதி கோரப்­படும் போதும் சட்ட மா அதிபர் திணைக்­களம் எதிர்ப்புத் தெரி­விக்கக் கூடாது என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உத்­த­ர­விட்­டி­ருந்தார். அவ்­வா­றி­ருக்­கையில் நேற்­று­முன்­தினம் காலை நீதி­மன்­றத்­துக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட அர­சியல் கைதி­க­ளுக்­கான பிணை அனு­மதி மறுக்­கப்­பட்­டது. அதனைத் தொடர்ந்து பிர­தமர் உள்­ளிட்ட அர­சாங்கத் தரப்­பி­ன­ருடன் நாம் பேச்­சுக்­களை முன்­னெ­டுத்தோம்.

அதனைத் தொடர்ந்து சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தால் நகர்த்தல் பிரே­ரணை சமர்ப்­பிக்­கப்­பட்டு 31 கைதிகள் ஆஜர்ப்­ப­டுத்­தப்­பட்டு 10 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான தலா இரு ஆட்­பி­ணையில் செல்­வ­தற்கு அனு­ம­திக்­கப்­பட்­டனர். எனினும் ஆட்­பி­ணைக்­கான கையொப்­ப­மி­டு­வ­தற்கு அவர்­க­ளுக்கு யாரும் இல்­லா­ததன் கார­ண­மாக மீண்டும் அவர்கள் சிறைக்கு கொண்டு செல்­லப்­பட்­டி­ருக்­கின்­றனர்.

இந்தச் செயற்­பாடு மிகவும் கவ­லை­ய­ளிப்­பதும் கண்­டிக்­கத்­தக்­க­து­மாகும். தமிழ் அர­சியல் கைதிகள் அனை­வரும் பொது மன்­னிப்­பிலோ அல்­லது நிபந்­த­னை­யற்ற ரீதி­யிலோ விடு­தலை செய்­யப்­பட வேண்டும் என்­பதே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னது நிலைப்­பா­டாகும். அர­சாங்­கத்தின் இவ்­வா­றான செயற்­பாடு எமக்கு ஏமாற்­ற­ம­ளிக்­கின்­றது. அவர்கள் எமக்­க­ளித்த வாக்­கு­று­தி­களின் பிர­காரம் நடந்­து­கொள்­ள­வில்லை.

தமிழ் அர­சியல் கைதிகள் அனை­வரும் அர­சியல் கார­ணங்­க­ளுக்­கா­கவே கைது­செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். அவ்­வா­றி­ருக்­கையில் தற்­பொ­ழுது சிக்­க­லான முறையில் பிணையில் செல்­வ­தற்கு அனு­ம­திக்­கப்­பட்­டி­ருப்­பதை எம்மால் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அதனை நாம் வன்­மை­யாகக் கண்­டிக்­கின்றோம்.

பயங்­கர­வாத தடைச்­சட்­டத்தை உடன் நீக்­க­வேண்டும்

தமிழ் அர­சியல் கைதி­களின் பிரச்­சினை இவ்­வாறு நீண்டு செல்­வ­தற்கு நாட்டில் நடை­மு­றையில் உள்ள பயங்­க­ர­வாத தடைச் சட்­டமே கார­ண­மாக இருக்­கின்­றது. இந்தச் சட்­டத்தின் பிர­காரம் பொலிஸார், பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர், குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர், சட்ட மா அதிபர் திணைக்­களம் போன்ற தரப்­புக்­க­ளுக்கு அதி­கா­ரங்கள் உச்ச அளவில் வழங்­கப்­பட்­டுள்­ளன. இதனால் அவர்கள் சுதந்­தி­ர­மாக செயற்­ப­டு­வ­தற்­கான சூழல் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 30 ஆவது கூட்டத் தொட­ரின்­போது அர­சாங்கம் நாட்டில் ஜன­நா­ய­கத்தை உறு­திப்­ப­டுத்தி நல்­லாட்­சியை நிலை­நாட்­டு­வ­தாக குறிப்­பிட்­ட­தோடு நடை­மு­றை­யி­லுள்ள பயங்­கர­வாதத் தடைச்­சட்டத்தை நீக்­கு­வ­தா­கவும் வாக்­கு­று­தி­ய­ளித்­துள்­ளது.

அத்­துடன் தேர்தல் காலங்­க­ளிலும் இதை­யொத்த கருத்­துக்­களை தெரி­வித்து சிறு­பான்மை மக்­களின் ஆத­ரவை பெற்­றுள்­ளது. ஆகவே அர­சாங்கம் உள்­நாட்­டிலும் சர்­வ­தே­சத்­திலும் அளித்த வாக்­கு­று­திக்­க­மைய பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை உடன் நீக்­க­வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ரா­கிய நாம் வலி­யு­றுத்­து­கின்றோம்.

இந்தக் கொடூர சட்டம் அமுலில் இருப்­பதன் கார­ண­மா­கவே தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலைக் காலம் நீண்டு செல்­கி­றது. தொடர்ந்தும் அதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

எனவே பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை உடன்­நீக்கி அனைத்து தமிழ் அர­சியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும் என நாம் அரசாங்கத்தை மிகக் கடுமையாக வலியுறுத்துகின்றோம் என்றார்.