Breaking News

கொழும்பில் தீவிர பேச்சுக்களில் ஈடுபட்ட ஜெய்சங்கர் – இன்று கூட்டமைப்புடன் சந்திப்பு

இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று கொழும்பில் இலங்கை அரசாங்கத்துடன் தீவிர பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த போதும், இந்தப் பேச்சுக்கள் பற்றிய விபரங்கள் ஏதும் வெளியில் கசிய விடப்படவில்லை.

இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் நேற்றுக்காலை 11.10 மணியளவில் தனி விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். கொழும்பில் உடனடியாக அவர் இலங்கை வெளிவிவகாரச் செயலர் சித்ராங்கனி வகீஸ்வராவைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தி்னார்.

அதையடுத்து இலங்கையின் அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவைச் சந்தித்துப் பேசினார். நேற்றுமாலை அவர்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

அதேவேளை, இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கருக்கு இராப்போசன விருந்தளித்து, அவருடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார்  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.

இன்று புதுடெல்லி திரும்புவதற்கு முன்னதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோரையும், இந்திய வெளிவிவகாரச் செயலர் சந்திக்கவுள்ளார்.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் அவர் சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய வெளிவிவகாரச் செயலராகப் பொறுப்பேற்ற பின்னர், எஸ்.ஜெய்சங்கர் கொழும்புக்கு மேற்கொண்டிருக்கும் முதலாவது பயணம் இதுவாகும்.

அடுத்த மாதம், 5ஆம், 6ஆம் நாள்களில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் இந்திய இலங்கை கூட்டுக்குழுக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதே இவரது பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

நேற்று முற்பகல் கொழும்பு வந்த இந்திய வெளிவிவகாரச் செயலருடன் இலங்கை அரசின் முக்கிய பிரதிநிதிகள் பேச்சுக்களை நடத்திய போதும், அதுபற்றிய எந்த விபரங்களும் ஊடகங்களுக்குச் கசிய விடப்படவில்லை.

இந்திய வெளிவிவகாரச் செயலரின் இந்தப் பயணம் தொடர்பான தகவல்களை இரு நாடுகளும் வெளியிடுவதற்கு குறைந்தளவு முக்கியத்துவமே கொடுத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.