Breaking News

புதிய அரசியல் யாப்பு : யுத்தகுற்ற விசாரணைக்கான மாற்றீடாக அமையாது - நியூயோர்க் டைம்ஸ்

ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் தற்போது உருவாக்கப்படும் புதிய அரசியல் யாப்பு, யுத்த குற்ற விசாரணைக்கான நீதிப் பொறிமுறைக்கான மாற்றீடாக அமையாது என நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

”ஸ்ரீலங்காவில் நீதிக்கான தருணம் இது” என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கத்தில் (Editorial) நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை இவ்வாறு கூறியுள்ளது.

ஆசிரியர் தலையங்கத்தில் கூறப்பட்ட விபரங்கள் வருமாறு…

2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட கொடுமையான யுத்தத்தால் சிதைவுற்ற நாட்டை வழமைக்கு கொண்டுவருதல் மற்றும் பொறுப்புகூறல் தொடர்பில் புதிய யுகமான அரசாங்கத்தை ஸ்தாபிப்பார் என்ற நம்பிக்கையில் ஸ்ரீலங்காவில் புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கு வாக்காளர்கள் திரண்டு ஒருவருடம் கடந்து சில நாட்கள் சென்றுள்ளன.

கடந்த ஜனவரி மாதம் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் இந்த நம்பிக்கையை நிறைவேற்றுவதற்கான தைரியமான நடவடிக்கைகளை மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துள்ளார்.

எவ்வாறாயினும் கடந்த ஒக்டோபர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்ட இடைக்கால நீதிச் செயன்முறை முன்னோக்கி கொண்டு செல்லப்படாத வரை யுத்தத்தின் காயங்களை குணப்படுத்த முடியாது. அந்த புள்ளியில், தனது அரசாங்கம் அவசரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாது என மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இந்த கருத்து ஏற்றுக்கொள்ள முடியாது. சிவில் யுத்த காலப்பகுதியில் தமிழ் கிளர்ச்சி படையினராலும் ஸ்ரீலங்கா இராணுவத்தினராலும் கொடுமைக்கள் இழைக்கப்பட்டுள்ளன. இந்த கொடுமைகளுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக கட்டாயம் வழக்கு தொடரப்பட வேண்டும்.தாம் பதவியில் இருந்த ஓராண்டு காலத்தில் தலைமை வகிப்பதற்கான திறன் உள்ளது என்பதை மைத்திரிபால சிறிசேன நிரூபித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதிகளுக்கு தலைமை வகித்து செயற்பட்ட மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் குடும்ப மற்றும் ஒடுக்குமுறை ஆட்சியை ஒழிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.

நாட்டின் நிர்வாகத்தில் ஸ்ரீலங்காவின் சிறுபான்மையினரான தமிழர்களையும் முஸ்லீம்களையும் உள்ளடக்கியுள்ளதுடன், அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் மேலதிக பேச்சு சுதந்தித்திற்கு அனுமதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ளார்.

ராஜபக்ஸ அரசாங்கம் பின்பற்றிய சீனாவின் பக்கம் சாயும் நிலைமையை நிமிரச் செய்து அமெரிக்கா மற்றும் இந்தியாவுடனான சீர்குலைந்த உறவுகள் உள்ளடங்கலாக ஸ்ரீலங்காவின் வெளிநாட்டு உறவுகளில் சமநிலையான அணுகுமுறையை ஏற்படுத்தியிருந்தார்.

அத்துடன் புதிய அரசியலமைப்பு வரைவை உருவாக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மைத்திரிபால சிறிசேன இம்மாதம் அறிவித்திருந்தார்.

இவ்வாறான நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. எவ்வாறாயினும் நீதிப் பொறிமுறைக்கான மாற்றீடாக இவை அமையாது.

சுமத்தப்பட்டுள்ள துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் மறுத்துள்ள போதிலும், அது குறித்து மைத்திரிபால சிறிசேனவின் கண்காணிப்பின் கீழ் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

40 ஆயிரம் தமிழ் சிவிலியன்களின் உயிர்களை காவுகொள்ள காரணமான யுத்தத்தின் இறுதி மாதங்களில் இரத்தக்களரிமிக்க நடவடிக்கைகளை மேற்பார்வையிட்ட இராணுவ அதிகாரிகள் தொடர்ந்தும் அதிகாரத்தில் உள்ளனர். அவர்களுக்கு பதவி உயர்வுகள் கூட வழங்கப்படுகின்றன.

சிங்கள தேசியவாதிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ள முஸ்லீம்களுக்கு எதிரான ஆபத்தான பிரசாரம் ஸ்ரீலங்காவின் இனப் பிரிவு மோதல்களுக்கான மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.


யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்வதற்காக சொந்தமாக விசேட நீதிமன்றத்தை ஸ்ரீலங்கா அமைப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை கடந்த இலையுதிர்காலப் பகுதியில் இணக்கம் தெரிவித்திருந்தது. ஐக்கிய நாடுகள் சபைக்கான பொறுப்புக்களை தனது அரசாங்கம் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டிய அவசியம் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஏற்பட்டுள்ளது. அது ஸ்ரீலங்கா பிரஜைகளினதும் தார்மீக கடமையாகும்.