13வது திருத்தத்தை அடிப்படையாக கொண்ட அதிகாரப்பகிர்வு – இந்தியா விருப்பம்
13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள அதிகாரப் பகிர்வை அடிப்படையாக கொண்டு, புதிய அரசியலமைப்பு வரையப்படுவதை இந்தியா விரும்புவதாக, இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக நேற்றுமுன்தினம் இலங்கை வந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், நேற்றுக்காலை 9 மணியளவில், தாஜ் சமுத்ரா விடுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
சுமார் ஒரு மணிநேரம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதன்போதே, 13ஆவது திருத்தத்தின் உள்ளடக்கங்களை அடிப்படையாக கொண்டு, புதிய அரசியலமைப்பின் அதிகாரப்பகிர்வு வரைவுகள் இடம்பெறுவதை இந்திய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்புத் தொடர்பாக இந்திய ஊடகம் ஒன்றிடம் கருத்துவெளியிட்டுள்ள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்,
“இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக சுதந்திரமாகவும், உறுதியாகவும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம். மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை இந்திய வெளிவிவகாரச் செயலர் நினைவுபடுத்தினார்.
இதனை ஆரம்பமாக கொண்டு இலங்கை புதிய அரசியலமைப்பை கட்டியெழுப்ப வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.
இலங்கையின் அரசியலமைப்பை மீள வரையும், அரசாங்கத்தின் முயற்சி தொடர்பாக அறிந்து கொள்வதிலும், இதற்காக நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் திட்டம் குறித்தும் இந்திய வெளிவிவகாரச் செயலர் ஆர்வம் காட்டினார். இது ஒரு பயன்மிக்க சந்திப்பாக அமைந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.








