முள்ளிவாய்க்காலில் கடற்படையினரிடம் உள்ள காணிகளில் மனித சடலங்கள்
கடற்படையினரிடமிருந்து தமது காணிகளை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முள்ளிவாய்க்கால் கிழக்கு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் கிழக்கில் மக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணிகள் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றது.
இந்த காணிகளை சொந்தமாக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா கடற்படையினர் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையிலேயே விழிப்படைந்த பொதுமக்கள், இன்று வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனை சந்தித்த தமது காணி உறுதிகளை காண்பித்து உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் தமது காணிகளை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.வட்டுவாய்க்கால் ஏ1 காவலரண் தொடக்கம் ஏ 8 காவலரண் வரைக்கும் முட் கம்பிகளால் வேலி அடைத்து அதற்குள் யாரும் நுழையாதவாறு கடற்படையினரும் விசேட அதிரடிப்படையினரும் இரவு பகலாக காவல் காத்து வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த இடத்திற்குள் ஊடகவியலாளர் சென்று பொதுமக்களின் காணிகளை பார்வையிட்டு அக்காணிகள் தொடர்பாக புகைப்படங்களை எடுத்ததுடன் அக்காணிகள் படையினரின் பயன்பாட்டில் இல்லாது கட்டுப்பாட்டில் மாத்திரமே உள்ளது என்பதை உறுதி செய்துள்ளார்.
எனினும் இந்த காணிகளை படையினரும் பயன்படுத்தாமல் பொதுமக்களிடமும் கையளிக்காமல் பற்றைகள் வளர்ந்து காணப்படுகின்றது.இந்த நிலையில் குறித்த காணிகளை படையினர் மக்களுக்கு வழங்குவதற்கு முன்வராத காரணத்தை மக்களிடம் கேட்டபொழுது இறுதிக்கட்ட போரின்போது இனப்படுகொலை செய்யப்பட்ட பொது மக்களின் சடலங்கள் அங்கே புதைக்கப்பட்டமையாலேயே படையினர் காணிகளை தம்மிடம் தர மறுப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.








