பொங்கலுக்கு முதல் 600 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் - மாவை
எதிர்வரும் 15ஆம் திகதி பொங்கல் தினத்துக்கு முன்னதாக 600 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் என நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை நேற்று(திங்கட்கிழமை) மாலை நேரில் சென்று பார்வையிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்குச் சொந்தமான 5,048 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரின் வசம் இன்னமும் உள்ளதாகவும் இதனை விடுவிக்க வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








