வடக்கு மக்களின் பிரச்சினை மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் : ஜெய்சங்கர் உறுதி
போரால் நலிவுற்ற வடக்கு மக்களின் பிரச்சினைகள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென இந்திய வெளியுறவு செயலாளர் .ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில், இன்று கொழும்பில் நடைபெற்ற சந்திப்பிலேயே ஜெய்சங்கர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பின்போது, புதிய அரசியலமைப்பில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணுதல், வடக்கு மக்கள் எதிர்நோக்கும் காணி மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள், மீள்குடியேற்ற நடவடிக்கை, வடக்கில் இராணுவ பிரசன்னம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஜெய்சங்கரிடம் சம்பந்தன் விளக்கியுள்ளார்.
கொழும்பு தாஜ் சமுத்திரா விடுதியில் இன்று முற்பகல் நடைபெற்ற குறித்த சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா, இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைப்புச் செயலாளர் ஆகியோரும் உடனிருந்ததாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.








