Breaking News

இராணுவத்தினர் எனது மகனை கடத்தி தலையாட்டியாக பயன்படுத்தினர் - தந்தை சாட்சியம்

கடத்தப்பட்டு ஒரு மாதத்தின் பின்னர் மகனை இராணுவத்தினர் தலையாட்டியாக பயன்படுத்தினர் என தந்தை ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.

காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள், ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் இன்று(சனிக்கிழமை) கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது.

இதில் கோப்பாய், பருத்தித்துறை, கரவெட்டி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் கோப்பாய் பிரதேச செயலகத்தில் சாட்சியமளித்து வருகின்றனர்.

இதன்போது சாட்சியமளித்துள்ள செந்தில்நாதன் எனும் நபர், செந்தில்நாதன் கமலேந்திரன் என்ற எனது மகன், சிறுப்பிட்டி பகுதியில் மரமுந்திரிகை தோட்டம் வைத்திருந்தார். கடத்தப்படும் போது அவருக்கு 25 வயது. 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் திகதி இரவு அத்துமீறி வீட்டுக்குள் புகுந்தவர்கள் ஆயுதமுனையில் மகனைக் கடத்திச் சென்றனர்.

கடத்தப்பட்டு ஒரு மாதத்தின் பின்னர் எமது இடத்துக்கு அருகிலுள்ள இராணுவ முகாமில் இடம்பெற்ற சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது எனது மகனை தலையாட்டியாக இராணுவத்தினர் கொண்டு வந்தனர். எனினும், இதுவரை மகன் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை என தெரிவித்துள்ளார்.