எல்லை நிர்ணய செயற்பாடுகள் முடிவுற்ற பின்னரே உள்ளூராட்சி மன்ற தேர்தல்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு 1000 இற்கும் அதிகமான தேர்தல் வட்டாரங்களில் திருத்தம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அவற்றில் முழுமையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கையாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறுமென உள்ளூராட்சி மகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
பிரதமர் தேர்தல் இடம்பெறுவதற்கு காலதாமதமாகும் என்று குறிப்பிட்டிருந்தாலும் எல்லை நிர்ணய செயற்பாடுகள் முற்றுப் பெற்றதன் பின்னர் எவ்வித காலதாமதமும் இன்றி தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காலதாமதம் ஆகின்ற நிலையில் இது தொடர்பிலான போலியான பிரசாரங்கள் பல நாட்டில் முன்னெடுக்கப்படுகின்றன.இந்நிலையில் தற்போது எல்லை நிர்ணய பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன.
வரும் தேர்தலை முன்னிட்டு 1000 இற்கும் அதிகமான தேர்தல் வட்டாரங்களில் தற்போது திருத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.அதனால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் எல்லைப் பகுப்பு பணிகள் முற்றுப்பெறும் வரையில் உள்ளுராட்சி மன்ற தேர்தல் இடம் பெறாது.
இந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தேர்தல் இவ்வருடத்தில் இடம்பெறுவது கடினம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் ஐக்கிய தேசிய கட்சி உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தோல்வியை தழுவப்போவதாலேயே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நாம் எல்லை நிர்ணயப் பணிகளை நிறைவுசெய்ய காலதாமதம் ஆகும் என்ற நோக்கிலேயே தேர்தல் இடம்பெறாது என்று தெரிவித்துள்ளார்.எவ்வாறிருப்பினும் துரிதமாக எல்லை நிர்ணயப் பணிகளை நிறைவுசெய்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கையாக தேர்தல் நடைபெறும் என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.
மறுபுறம் எல்லை நிர்ணயப் பணிகளின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வெற்றி பெறவைக்கும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை உண்மைக்குப் புறம்பான விடயங்கள் .நீதியான முறையில் எல்லை பகுப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த தேர்தல் முறையில் பிரதான இரு கட்சிகளுக்கும் வெற்றிவாய்ப்புக்கள் அதிகம் இருந்தாலும் வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் அங்கு ஆதிக்கம் செலுத்தும் கட்சிகள் வெற்றிபெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் புதிய தேர்தல் முறைமை சிறிய கட்சிகளுக்கு பாதகமாக அமையும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத குற்றச்சாட்டு.
அதேபோல் சுதந்திரக்கட்சியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிளவுபடுத்திவிட்டார் என்ற போலியான பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவையும் பொய்யான குற்றச்சாட்டுக்களே.
இவ்வாறு பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாலும் புதிய கட்சி களை உருவாக்கி சுதந்திரக்கட்சியை உடைக்கப் பார்ப்பதும் சாத்தியப்படாத செயற்பாடுகள். எமது எதிர்பார்ப்புக்கள் சுதந்திரக் கட்சியை உடைப்பதல்ல. அதற்கு மாறாக சுதந்திரக் கட்சியின் பிரதேச மட்டத்திலான அரசியலை வலுப்படுத்த பிரதேசசபைகளில் 30 சதவீதமாக பெண் பிரதிநிதித் துவத்தை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளோம்.








