சமஸ்டியை நிராகரித்தது சிறிலங்கா சுதந்திரக் கட்சி
சமஸ்டி ஆட்சிமுறைக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஆதரவு வழங்காது, அதுபற்றிப் பேச்சுக்களையும் நடத்தாது என்று, அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபையினால் முன்மொழியப்பட்டுள்ள சமஸ்டி ஆட்சி முறை பற்றிய யோசனை தொடர்பாக, கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
“வடக்கு, கிழக்கு இணக்கப்பட வேண்டும். சமஷ்டி ஆட்சி முறை கொண்டு வரப்பட வேண்டும் என்று வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.மாகாண சபைகளில் பல்வேறு பிரேரணைகள் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால் அவற்றுக்கு சட்டபூர்வமான அங்கீகாரம் கிடைப்பதற்கு ஆளுனரின் அனுமதி தேவை.
வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு வடமாகாண ஆளுனரின் அனுமதி கிடைக்கப் போவதில்லை.வடக்கு, கிழக்கை மீண்டும் இணைத்தல் மற்றும் சமஸ்டி முறைமையிலான தீர்வு என்பனவற்றை சிறிலங்கா சுதந்திரக் கட்சி கடுமையாக எதிர்க்கிறது.
இது தொடர்பான பேச்சுக்களுக்கே இடமில்லை. அதுபற்றிப் பேசவும், நடத்தவும் அரசாங்கம் தயாரில்லை. இதுபோன்று நகர்வுகள் இப்போதுள்ள அரசியல் உறுதித்தன்மையை சீர்குலைத்து விடும்.
அனைத்து தீர்வும், 13 ஆவது திருத்தத்துக்குட்பட்டதாகவே முன்னெடுக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.