சம்பந்தன் வெள்ளியன்று வடக்கு விஜயம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வடமாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதன்போது வடமாகாணசபையினால் உருவாக்கப்பட்ட அரசியல் தீர்வுத் திட்ட வரைபு கையளிக்கப்படவுள்ள அதேநேரம் மாகாணசபையின் அமைச்சரவை மாற்றம் குறித்து இறுதி செய்வதற்கான முக்கிய பேச்சுவார்த்தையொன்றும் இடம்பெறவுள்ளது.
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்காக அரசியல் தீர்வுத் திட்ட முன்வரைபொன்றை தயாரிப்பதற்காக வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் 19 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை நியமிக்கப்பட்டது.
அக்குழுவினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத் திட்ட முன் வரைபானது கடந்த வியாழக்கிழமை மாகாணசபையில் சமர்ப்பிக்கப்பட்டபோதும் இதன் மீதான விவாதம் நாளை செவ்வாய்கிழமை இடம்பெறவுள்ள விசேட அமர்வில் நிறைவடையவுள்ளதோடு இறுதிசெய்யப்படவுமுள்ளது.
பின்னர் மாகாண சபையின் முன் வரைபானது எதிர்வரும் 16ஆம் திகதி சனிக்கிழமை வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனிடம் யாழ்.பொது நூலகத்தில் வைத்துக் கையளிக்கப்படவுள்ளது.
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா ஆகியோர் இணைந்து இவ்வரைபைக் கையளிக்கவுள்ளதோடு வடமாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் பிரசன்னமாகவுள்ளனர்.
அமைச்சர்கள் மாற்றம் இதேவேளை நாளைய தினம் வடமாகாண சபையை எஞ்சிய இரண்டரை வருடங்களாவது வினைத்திறன் மிக்கதாக செயற்படுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி நான்கு மாகாண அமைச்சர்களும் மாற்றப்படவேண்டும். அத்துடன் அவர்களுடன் இணைந்து செயற்படுதவற்கு புதிய உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி வடமாகாண முதலைமைச்சரிடம் நாளை செவ்வாய்க் கிழமை இடம்பெறவுள்ள விசேட அமர்வின் போது மகஜரொன்று கையளிக்கப்படவுள்ளது.
வடமாகாண சபையின் பிரதி தவிசாளர் அன்டணி ஜெகநாதனால் கையளிக்கப்படவுள்ள இக்கோரிக்கை மகஜரில் 16ஆளும் தரப்பு உறுப்பினர் நேற்றை வரையில் கையெப்பமிட்டுள்ளனர். அத்துடன் முல்லைத்தீவு மாவட்டம் யுத்தத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளமையைக் கருத்திற்கொண்டு அம்மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைச்சுப்பதவியொன்று வழங்கப்படவேண்டும் எனவும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக்கட்சிகளுக்கும் சமமான அந்தஸ்து வழங்கி அமைச்சுப்பதவிகள் பகிரப்படுவது அவசியமெனவும் ஜனநாயகக் கோரிக்கையை கவனத்திலெடுத்து நடவடிக்கைகள் வௌிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்படவேண்டுமென அம்மகஜரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் வடமாகாண சபையின் ஆளும் தரப்பில் உள்ள முதலமைச்சர் நான்கு அமைச்சர்கள் தவிர்ந்து காணப்படும் 24 உறுப்பினர்களில் இது மூன்றிலிரண்டு பெரும்பான்மையான உறுப்பினர்கள் இம்மகஜரில் கையொப்பமிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. வடமாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இம்மகஜரில் கையொப்பமிட முன்வந்திருந்தபோதும் அவர்கள் உள்ளீர்த்துக்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் எதிர்வரும் 16ஆம் திகதி சனிக்கிழமை வடமாகாண சபையின் அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைபு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான சம்பந்தனிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் வடமாகாண முதலமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களை ஒருங்கிணைப்பது தொடர்பில் கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக தெரியவரும் அதேேளை இதன்போது மாகாண சபையின் அமைச்சர்கள் மாற்றம் குறித்து இறுதித்தீர்மானம் எடுக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னதாக 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் திகதி வடமாகாண தேர்தல் நடைபெற்றிருந்தபோதும் மாகாண சபைக்கான கட்டத்தொகுதி, அமைச்சர்கள் நியமனம் குறித்த பிரச்சினைகள் நீடித்துக்கொண்டிருந்தமையால் சர்ச்சைகளுக்கு மத்தியில் ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதியே அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
எனினும் குறித்த முடிவுகளை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இறுதிசெய்தாக கூறப்பட்போதும் முதல் இரண்டரையாண்டுகாலப்பகுதிக்கே இந்நியமனங்கள் வழங்கப்படுவதாகவும் அதன் பின்னர் அது மாற்றப்படுமென்றும் உறுதியளிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் இன்று திங்கட்கிழமையுடன் வடமாகாணசபை தனது இரண்டரையாண்டு காலப்பகுதியை பூர்த்திசெய்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








