Breaking News

ஜனாதிபதிக்கு ஸ்ரீதரன் அவசர கடிதம்!

யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட வடமாகாணத்தில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிப்பதற்கு உடன்விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.


கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் ஜனாதிபதிக்கு நேற்று புதன்கிழமை அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியோரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளின் தகவல்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தனது கடிதத்தில் இணைத்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளை அபகரிக்கும் திட்டத்தை நல்லாட்சி அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிக்கு அமைய நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மக்கள் இன்றும் திறந்தவெளிச் சிறைச்சாலையில் புறம்பான ஒரு தீவில் வாழ்வதைப் போன்ற உணர்வே ஏற்பட்டிருப்பதாக ஸ்ரீதரன் கூறியுள்ளார்.