சிங்களவர்கள் நிம்மதியாக வாழ உளப்பூர்வமான தீர்வே வழங்க வேண்டும்!- ஜனாதிபதி
சிங்கள பௌத்தர்கள் நிம்மதியாக வாழ வேண்டு மானால் தமிழ்மக்களினதும் முஸ்லிம்களினதும் அனைத்துப்பிரச்சினைகளும் உளப்பூர்வமாகத் தீர்க்கப்பட வேண்டும். இதுவே ஒரே வழி என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நாட்டு மக்களுக்குத் தேவையானதையே நாம் வழங்க வேண்டும். நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லவேண்டியது அவசியம். அதனைவிடுத்து நாட் டைப் பிரிப்பதற்கு முயற்சிக்கிறார்களென பிரசாரங்களை மேற்கொண்டு பிரச்சினை தீர்ப்பதற்கு தடையாக இருக்ககூடாது. தெற்கில் உள்ள அடிப்படை வாதிகளே இவ்வாறான பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். நிலையான சமாதானத்தை வழங்குவதற்கு அனைவரும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கிறேன் என்றும் ஜனாதிபதி கூறினார்.
ஏறாவூரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆடைத்தொழிற்சாலையை திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார். கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அஹமட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இங்கு ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
இந்தப் பிரதேசம் எனக்கு புதியதல்ல. உங்களுடைய மாவட்டத்திற்கு அடுத்த மாவட்டம் தான் என்னுடையது. நான் பிறந்ததும் வாழ்ந்ததும் அடுத்த மாவட்டத்திலே தான். பாடசாலைக்கு செல்லும் போது இந்த பகுதிக்கு வந்துள்ளேன். கல்வி கற்கும் போது நண்பர்களுடன் இணைந்துதுவிச்சக்கர வண்டியில் இம்மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளேன்.
30ஆண்டுகளாக எனக்கு தெரிந்த அனுபமான பிரதேசம் இதுவாகும். கடந்த ஜனவரி 8ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் நீங்கள் எனக்கு பாரிய ஒத்துழைப்பை வழங்கினீர்கள். இந்த நாட்டில் மாற்றம் ஒன்றினை உருவாக்குவதற்காக நீங்கள் வழங்கிய ஆதரவுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள்.
எனக்கு வாக்களித்த மக்கள் வேண்கோளொன்றை விடுத்தார்கள். அவர்கள் தமது வேண்டுகோளில் உணவோ உடையோ இல்லையென்று கூறவில்லை. எமக்கு உணவு உடை இருந்தாலும் சுதந்தரமாக வாழக்கூடிய சூழலையே உருவாக்கித்தாருங்கள் என்றே சொன்னார்கள்.
சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் பயந்துடன் வாழ்ந்த காலம் உள்ளது. சுதந்திரமாக வாழவில்லை. சுதந்திரமாக தொலைபேசியில் கூட பேசவில்லை. தொலைபேசியில் பேசும் போது கூட இரகசியமாகவே பேசினார்கள். தமது உரையாடல்கள் பதிவு செய்யப்படுகின்றதென பயந்தார்கள்.
இந்த நாட்டு மக்கள் சுதந்திரமாக பேசக்கூடிய நிலை இருக்கவில்லை. யுத்தம் நிறைவடைந்த பின்னரும் அச்சமான சூழலே காணப்பட்டது. அவ்வாறான நிலையில் சமாதானத்தை உருவாக்குவதற்கு மக்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள். சமாதானத்தை பற்றி நீண்டகாலத்திற்கு நி்லை நிறுத்திக்கொள்ளவேண்டும். துப்பாக்கியினால் நீண்ட சமாதானத்தை உருவாக்க முடியாது.
நாட்டு மக்கள் மனதில் பல்வேறு பிரச்சனை உள்ளன. அவர்களின் உளரீதியான பிரச்சினைகளுக்கு நிரந்தமான தீர்வை வழங்கவேண்டும். யுத்தகாலத்தில் எந்த மக்கள் இன, மத, பேதமின்றி மடிந்தார்கள். யுத்தம் நிறைந்த பின்னர் நிம்மதியாக வாழலாம் என்று கனவு கண்டார்கள். எனவே மீண்டும் யுத்தம் எற்படாத நிலைமையை உருவாக்கவேண்டும். நாட்டில் நிலையான சமாதானத்தை உருவாக்கும் பாரிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.
நீங்கள் இருக்கும் இந்த கிழக்கு மாகாணத்தில் சூரியன் உதிக்கின்றது. தென்மாகாணத்தில் சூரியன் மறைகின்றது. கிழக்கு மகாணத்திற்கும் மேற்கு மாகாணத்திற்கும் வித்தியாசம் உள்ளது. இந்த வித்தியாசத்தை காண்பது சூரியன் பகவான் மாத்திரம் தான் அவர் தான் நன்றாக எடுத்து கூறுவார்.
கிழக்கு மகாணத்தினதும் மேற்கு மகாணத்தினதும் அபிவிருத்தி சமமாக உள்ளதா? மக்கள் பொருளாதார நிலைமை சமமாக உள்ளதா? கல்வி வசதிகள் சமமாக உள்ளதா? சுகாதார சேவை ஒரே மாதியாக வழங்கப்படுகின்றனவா? பொதுப் போக்குவரத்து வசதி சமமாக உள்ளதா? பிரச்சினைகளை பார்க்கையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவ்வாறானால் இந்த பிரச்சினையை நாம் புரிந்து கௌ்ளவேண்டும்.
இது காலநிலை பற்றிய பிரச்சனை அல்ல. ஐக்கிய அரபு இராச்சியத்தை பொறுத்தவரையில் கஷ்டமான, வெப்பமாக நாடு. அப்பகுதியை பாலைவனம் என்று சொல்லுகிறோம். அது முன்னேற்றம் அடைந்துள்ளது. வடக்கு கிழக்கு மேற்கு தெற்கு என்ற வேறுபாடு இல்லை. அனைத்து மாகாணங்களும் ஒரேமாதிரியாக அபிவிருத்திடையவேண்டும்.
அனைத்து மாகாணங்ளும் சமமாக காணப்படவேண்டும். இவ்விதமான வேறுபாடின்றி சந்தேசமாக வாழ்வதற்காகவே எங்களது அரசாங்கத்தை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். மீண்டும் துப்பாக்கியை ஏந்துவதற்கு இடமளிக்க கூடாது. அனைத்து மாகாணங்களும் சமமான அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.
மக்கள் அனைவரும் சந்தோசமாக வாழும் சூழலை நாம் உருவாக்க வேண்டும். சிங்கள மக்கள் வாழ வேண்டுமானால் தமிழ் முஸ்லிம் மக்களின் அனைத்துப்பிரச்சனைகளும் தீர்க்கப்பட வேண்டும். அனைவரும் தங்களுடைய பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும்.
அவ்வாறான செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுக்கும் போது தென்னிலங்கையிலுள்ள சில கடும்போக்காளர்கள் நாங்கள் இந்த நாட்டைப் பிரிக்கப்போகின்றோம் என்றும் காட்டிக் கொடுக்கப்போகின்றோம். சர்வதேசத்துக்கு அடிபணிய வைக்கப்போகின்றோம் என்று கூறுகின்றோம் என்று பிரசாரம் செய்கின்றார்கள். விமர்சிக்கின்றார்கள்.
அவ்வாறு விமர்சிக்கின்றவர்களைவிட இந்த நாட்டைப் பற்றி எங்களுக்கு அதிக அக்கறை இருக்கின்றது. எனவே எதிராகப் குரலெழுப்பி பிரசாரம் செய்வதை விடுத்து விமர்சிப்பதை விடுத்து இந்த நாட்டை அபிவிருத்தி செய்து சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக அனைவரும் ஒன்றாக கைகோர்க்க வேண்டும். அனைவரும் சமாதானத்துடன் வாழ்வோம். நாட்டை மீண்டும் பிரிக்கச் சென்றால் கண்ணீர் வருவதற்கு நேரிடும்.
எல்லோரும் பிரச்சினையை புரிந்து அதனை தீர்ப்பதற்காக செயற்பட வேண்டும். எல்லோரும் ஒரே நோக்கத்திற்காக செயற்பட முடியுமென பௌத்த தத்துவம் சொல்கின்றது. அரசாங்கங்கள் தொடர்ந்து பயணிக்க முடியாது என்கின்றார்கள். அவர்களுடைய கனவு ஒருபோதும் நனவாகாது.அரசாங்கத்தினை வீழ்த்துவதற்கு போராடுவதை விட இருக்கின்ற அரசாங்கத்துடன் இணைந்து போராடுவதற்கு அழைப்பு விடுகின்றேன்.
2030ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம் எவ்வாறு இருக்கவேண்டும் தொலைநோக்கை அறிமுகப்படுத்தியைப்போன்று முழுநாடும் இலக்கை அடையவதற்கே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. இங்குவேலை செய்யும் பெண்களை பார்க்கையில் மிகவும் சந்தோசமாகவுள்ளது. அவர்கள் மத்தியில் இனமதமின்றி செயற்படுகின்றார்கள்.
கிழக்கு மாகாண சபை நல்லிணக்கத்தை சான்றாகத் திகழ்கிறது. அந்த அமைப்பை சக்திமயப்படுத்த வேண்டும். அரசாங்கம் என்ற வகையில் அதற்கான முழுமையான ஆதரவையும் வழங்குவோம்.பொருளாதாரத்தை மேம்படுத்தி உற்பத்தியை மேம்படுத்த வேண்டும். இந்த நாட்டில் எல்லாத்துறையினரும் சேவையாற்ற வேண்டும்.
நேர்மையாக அர்ப்பணிப்புடன் சேவை செய்ய வேண்டும். பொதுவான இலக்கு இருக்கின்றது. நாளைய நாளை நல்ல நாளாக மாற்றுவோம். உலகத்தில் பல நாடுகள் அவ்வாறே முன்னேறியுள்ளன. நாளை பிறக்கும் பிள்ளைகளுக்காக புதிய இலங்கையை கட்டியெழுப்ப வேண்டியது நமது கடமை என்றார்.
இதேவேளை சுமார் ஐயாயிரம் குடும்பங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வாழ்வாதாரத்தை வழங்கக் கூடிய ஆடைத் தொழிற்சாலை மற்றும் கைத்தறித்தொழிற்சாலை திறந்து வைக்ககப்பட்டுள்ளது.
நல்லாட்சி ஏற்படுத்தப்பட்ட பின்னர் கிழக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தித் திட்டமொன்று ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.
இத்தொழிற்சாலை மட்டுமே தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் குடும்பங்களும், மறைமுகமாக மூவினங்களையும் சேர்ந்த 3000 குடும்பங்களும் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வறுமை ஒழிப்புக்காக தொழிற்சாலைகளை ஆரம்பித்து அதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்ளும் கனவை நனவாக்கும் நோக்குடன் ஏறாவுரில் 6 தொழிற்சாலைகள் திட்டம் அமுலாகிறது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி திட்டமிடல் அமைச்சர் ரவுப் ஹக்கீம் பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.