Breaking News

காணமல்போக செய்யப்பட்டவர்கள் தொடர்பிலான சுயாதீன அலுவலகத்திற்கு எதிர்ப்பு



காணாமல்போகச் செய்யப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையின்றி, சுயாதீன அலுவலகம் அமைக்கும் முயற்சிக்கு சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பாக சுயாதீன அலுவலகம் அமைப்பதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

இந்தநிலையிலேயே, இலங்கை அரசாங்கமானது காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையின்றி, குறித்த அலுவலகத்தை அமைக்கவுள்ளதாகச் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியத்துக்கான இயக்குநர் பிரட் அடம்ஸ் நேற்று(வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களை கண்டறிவதற்கு விசேட கட்டமைப்பு ஒன்றை இலங்கை அரசு உருவாக்கவேண்டும் என தெரிவித்துள்ள அவர், அதில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளடக்கப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.