Breaking News

தாயக விடுதலைப் போரின்போது கொல்லப்பட்டவர்களுக்கான நினைவு வணக்க நிகழ்வு

வைகாசி மாதத்தில் வீரச்சாவடைந்த
அனைத்து மாவீரர்களுக்கும்,தாயக விடுதலைப் போரின்போது கொல்லப்பட்ட எமது மக்களுக்குமான நினைவு வணக்க நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு உலகத் தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்பேட் டில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் பொதுச் சுடரினை மில்றன்கீன்ஸ் தமிழ் கல்விக்கழகத்தின் தலைவர் குலசேகரம் சுதர்சன் அவர்களும், ஐக்கிய இராச்சியத்தின் தேசியக் கொடியை உலகத் தமிழர் வரலாற்று மையத்தை சேர்ந்த மயில்வாகனம் அவர்களும்,

தமிழீழ தேசியக் கொடியினை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மூத்த போராளி அன்சார் அவர்களும் ஏற்றினர்.

பொதுத் தூபிக்கான மலர்மாலை அணிவித்து மலர் வணக்கத்தை கப்ரன் தமிழ்வாணன் அவர்களின் சகோதரன் வசந் அவர்கள் செலுத்தினார்.

தொடர்ந்து மண்டப நிகழ்வுகள் நடைபெற்றது. இதில் மாவீரர் நினைவுத்தூபிக்கான ஈகைச் சுடரினை 10/05/1988 அன்று வீரச்சாவடைந்த லெப் வெங்கடேஸ் மேலும் இரு மாவீரர்களின் தாயாரான திருமதி இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம் அவர்களும்,

மலர் மாலையினை உலகத் தமிழர் வரலாற்று மையத்தை சேர்ந்த சத்தியரூபன் அவர்களும், அணிவித்து வணக்கம் செலுத்தினர்.

மக்களுக்கான நினைவுத்தூபிக்கு ஈகைச் சுடரினை தேசியச் செயற்பாட்டாளர் திருமதி ஜெசிந்தா அவர்களும், மலர் மாலையினை மில்றன்கீன்ஸ் தாயகம் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த யாழி அவர்களும் அணிவித்து வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து மலர் வணக்கத்தினை தேசியச் செயற்பாட்டாளர் திரு. அமர்நாத் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து மாவீரர்கள் மற்றும் மக்களுக்கான நினைவுத் தூபிகளுக்கு அனைத்து மக்களும் ஈகைச் சுடரேற்றி மலர் வணக்கமும் அகவணக்கமும் செலுத்தினர்.

மேலும் மாவீரர் நினைவுப் பாடல்களை திரு. சுரேஷ், மைக்கல் ஆகியோர் பாடினர்.

தலைமையுரையினை உலகத் தமிழர் வரலாற்று மையத்தைச் சேர்ந்த சங்கீதன் அவர்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மக்களின் அர்ப்பணிப்பும் தியாகமும் தொடர்பான நினைவுரையினை புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின் செயலாளரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை துணையமைச்சருமான யோகலிங்கம் அவர்களும், மாவீரர்கள் தொடர்பான சிறப்புரையினை போராளி திரு. இன்பன் அவர்களும் நிகழ்த்தினர்.

இறுதியாக மாவீரர் நினைவுப் பாடலுடன் உறுதியுரை எடுத்து நிகழ்வுகள் நிறைவடைந்தன.