புலம்பெயர் புலிகள் தன்னை கொலை செய்வார்கள் என்ற பயத்தில் மகிந்த!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ சாதாரண பாராளுமன்ற உறுப்பினராவார். எனவே அவரை கொலை செய்ய வேண்டிய எந்தவொரு தேவைப்பாடும் புலம்பெயர் அமைப்பினருக்குக் கிடையாது. அவ்வாறு கொலை செய்யப்படுவதாயின் ஜனவரி 8 ஆம் திகதி அல்லது ஆகஸ்ட் 17 ஆம் திகதிகளுக்கு முன்பே கொலைசெய்யப்பட்டிருக்க வேண்டும் என சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்த்துள்ளார்.
உலகின் பலம் வாய்ந்த தீவிரவாத இயக்கங்களான ஐ.எஸ், அல் கைதா போன்றவைகள் கூட முன்னாள் ஜனாதிபதியையோ அல்லது சாதாரண பாராளுமன்ற உறுப்பினரையோ தீர்த்து கட்டுவதற்கு காலத்தை வீணடிக்காது. தன்னுடைய பாதுகாப்பிற்கு இவ்வாறு அஞ்சுவதானது விடுதலை புலிகளுடனான யுத்தத்தை முழுமையாக முடிக்கவில்லை என்றே அர்த்தமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பலதரப்பட்ட வழக்கு விசாரணைகளின் முடிவு விரைவில் கிடைக்க பெறும் போது பாராளுமன்றத்தில் கூச்சல் போடுபவர்கள் சிறைச்சாலைக்கு செல்லும் காலம் தொலைவில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிட்ட கோட்டேயில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெ ளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது குருநாகல் மாவட்டத்தின் சாதாரண பாராளுமன்ற உறுப்பினராவார். எனினும் யுத்தத்தை வெற்றிக்கொண்ட தனக்கு இராணுவ பாதுகாப்பை கோருகின்றார். உலகில் எந்தவொரு அரசியல் தலைவர்களுக்கும் இராணுவ பாதுகாப்பை வழங்க முடியாது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு கூட பொலிஸ் , விசேட அதிரடி படையினரின் பாதுகாப்பே வழங்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் இராணுவ பாதுகாப்பு வழங்குவது சட்டவிரோதமான செயலாகும்.
அவருடைய பாதுகாப்பிற்காக 206 பேர் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். முப்பது வருடகால யுத்தத்தை முடிப்பதில் மஹிந்த ராஜபக்ஷவின் பங்களிப்பு அளப்பரியதாகும். எனினும் யுத்தம் பூரணமாக முடிவடைந்து விட்டதாகவும் விடுதலை புலிகள் இயக்கம் முழுமையாக அழிக்கப்பட்டதாகவும் மஹிந்த ராஜபக்ஷவே குறிப்பிட்டிருந்தார். ஆனால் தற்போது விடுதலை புலிகள் அமைப்பினர் அல்லது புலம்பெயர் அமைப்பினர் தன்னை கொலை செய்யலாம் என்று கூறுகின்றார். அவ்வாறாயின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தததை 100 வீதம் முழுமையாக முடிக்கவில்லை என்றே எமக்கு சந்தேகம் ஏற்படுகின்றது.
எவ்வாறாயினும் உலகின் பிரபல தலைவர்களில் தற்போதைக்கு ஓய்வுப்பெற்றுள்ள ஜோர்ஜ் டப்ளயூ புஷ் ,பில் கிளின்டன் போன்றவர்களுக்கே இல்லாத இராணுவ பாதுகாப்பு மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதற்காக வேண்டும்? தற்போதைக்கு அவர் சாதாரண பாராளுமன்ற உறுப்பினராவார். எனவே அவரை கொலை செய்ய வேண்டிய எந்தவொரு தேவைப்பாடும் புலம்பெயர் அமைப்பினருக்கு கிடையாது. அவ்வாறு கொலை செய்யப்படுவதாயின் ஜனவரி 8 ஆம் திகதியோ அல்லது ஆகஸ்ட் 17 ஆம் திகதிக்கு முன்பே கொலை செய்ய திருக்க வேண்டும்.
உலகின் பலம் வாய்ந்த தீவிரவாத இயக்கங்களான ஐ.எஸ், அல் கைதா போன்றவைகள் கூட முன்னாள் ஜனாதிபதியையோ அல்லது சாதாரண பாராளுமன்ற உறுப்பினரையோ தீர்த்து கட்டுவதற்கு காலத்தை வீணடிக்காது.
விடுதலை புலிகளுடனான போர் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் எந்தவொரு பிரபுக்களுக்கும் கொலை செய்யப்படவில்லை. அவ்வாறாயின் மஹிந்த ராஜபக்ஷ ஏன் அச்சம் கொள்ள வேண்டும். தற்போது அவர் சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக முடக்கப்பட்டுள்ளார். எனவே இராணுவ பாதுகாப்பை மட்டும் கோருவதன் காரணமாக பொலிஸாரை அவமதிப்புக்குள்ளாக்கியுள்ளார்.
யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட வேளை இராணுவ தளபதி சரத் பொன்சேகா அரசியல் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையிலேயே அடைத்து வைக்கப்பட்டார். அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பும் குறைக்கப்பட்டது. மற்றவர்களுக்கு செய்த அநியாயம் மீளவும் சுற்றி அவரையே தற்போது தாக்க தொடங்கியுள்ளது.
தற்போதைக்கு வசீம் தாஜூதீன் ,லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளின் முடிவுக்கு வரவுள்ளன. இதன்படி விரைவில் பாராளுமன்றத்தில் அட்டூழியம் புரிய கூடியவர்கள் சிறைச்சாலைக்கு செல்வது உறுதியாகும். சிறைச்சாலைக்கு செல்லும் நோக்கத்துடனேயே பொது எதிரணியினர் இவ்வாறு மிலேச்சத்தனமாக செயற்படுகின்றனர்.
மே தினத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பலம் குறைவடைந்தமையை அவதானிக்க முடிந்தது. தாம் பஸ் வண்டிகளில் மக்களை அழைத்து வரவில்லை என்றும் இதன்காரணமாகவே பெருமளவிலான மக்கள் வருகை தரவில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ கூறுகின்றார். அவரது செல்வாக்கு குறைவதாக அவரே ஒப்புக்கொண்டுள்ளார். ஜனாதிபதியாக இருந்தவரை மக்கள் தற்போது சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் என்ற தரத்திற்குள் முடக்கி வைத்துள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.








