Breaking News

பஸ் கட்டண மாற்றம் தொடர்பான தீர்மானம் அடுத்தவாரம் – ஜனாதிபதி



அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னரே பஸ் கட்டண மாற்றம் தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் பஸ் உரிமையாளர் சங்கங்களுக்குமிடையில் சந்திப்பொன்று நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பஸ் கட்டண மாற்றம் தொடர்பில், நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவிடம், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுக்கும் தமது கருத்தினை முன்வைப்பதற்கான வாய்பினை பெற்றுத்தருவதாக ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெரிவித்தார்.

அந்த கருத்துக்களுடன், கிடைக்கப்பெற்றுள்ள ஏனைய கருத்துக்கள் முன்மொழிவுகள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு அக்குழுவினால் முன்மொழியப்படுகின்ற ஆலோசனைகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதன்படி பஸ் கட்டண மாற்றங்கள் தொடர்பில் அமைச்சரவையினால் எடுக்கப்படுகின்ற முடிவுகளை போக்குவரத்து அமைச்சர் வெளியிடுவார்.

அத்தோடு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினாலோ அல்லது ஏனைய மாகாண, வீதி மற்றும் மக்கள் போக்குவரத்து அதிகார சபைகளினாலோ மறு அறிவித்தல்வரை தனியார் பஸ்களுக்கான புதிய போக்குவரத்து உரிமைப்பத்திரம் வழங்கப்படமாட்டாதெனவும் இக்கலந்துரையாடலின்போது
தீர்மானிக்கப்பட்டது.

போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்களும் மாகாணங்களின் போக்குவரத்து அமைச்சர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.