Breaking News

தமிழர்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கப்போகும் மைத்திரி அரசு!



கடந்த திங்கட் கிழமை இந்திய – இலங்கை மீனவர்களுக்கிடையில் நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் மீன்பிடிப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் முகமாக, இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்க சிறீலங்கா அரசாங்கம் பரிந்துரைசெய்துள்ளது எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனை இலங்கை இந்திய மீனவர் நலன் பேணல் மன்றத்தின் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆலோசகர் எஸ்.பீ.அந்தோனிமுத்து உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கு வட மாகாண மீனவர்கள் எதிர்புத் தெரிவித்துள்ளனர்.

குறித்த இந்திய – இலங்கை மீனவர் பிரச்சனையானது நீண்டகாலமாக தமிழ் நாட்டுத் தமிழ் மீனவர்களுக்கும் வடக்குக் கிழக்கு தமிழ் மீனவர்களுக்குமான பிரச்சனையே அன்றி சிங்கள மீனவர்களுக்கான பிரச்சனையல்ல.

இதில் இலங்கை அரசாங்கமானது தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்பரப்பில் அதாவது வடக்குக் கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலுக்கு அனுமதி வழங்குவதால்,

ஏற்கனவே, போரினால் வறுமை நிலையில் வாழும் தமிழ் மக்கள் இன்னும் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள். அல்லது தமிழ் மக்களே தமக்குள்தாமே சண்டையிடும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

இதுவரை காலமும் சிறீலங்கா அரசாங்கத்தினால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு யுத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துவந்த தமிழக மக்களின் விரோதத்தை வடக்குக் கிழக்கு மக்கள் சந்திக்கும் நிலை உருவாகும்.

இந்நிலையில், இந்திய மீனவர்களை வடக்குக் – கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிக்கும் மைத்திரி-ரணில் அரசாங்கமானது செயற்பாடானது, தமிழ் மக்களை தங்களுக்குள் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் செயலுக்கு ஒப்பானது எனச் சில புத்திஜீவிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.