Breaking News

பாதுகாப்பு விவகாரங்களை ஆய்வு செய்ய புதிய நிறுவகத்தை அமைக்கிறது இலங்கை



பாதுகாப்பு விவகாரங்களை ஆய்வு செய்வதற்காக சிந்தனைக் குழாம் ஒன்றை உள்ளடக்கிய ஆய்வு அமைப்பு ஒன்றை  பாதுகாப்பு அமைச்சு உருவாக்கியுள்ளது.

தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிறுவகம் என்ற பெயரில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிறுவகத்துக்காக சிலரை ஆட்சேர்ப்புச் செய்யவுள்ளதாகவும், அதன் பின்னர் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக ஆய்வுகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“பாதுகாப்புத் தொடர்பான எல்லா விடயங்களும் கவனத்தில் கொள்ளப்படும். சிறிலங்காவின் பாதுகாப்புடன் தொடர்புடைய, சிறிலங்காவின் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பல்வேறு நாடுகளினதும், தேசிய அனைத்துலக செயற்பாடுகளை உள்ளடக்கியதாக இந்த ஆய்வுகள் இருக்கும்” என்றும், சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் தெரிவித்துள்ளார்.