சிறிலங்காவில் நடப்பதை உலகம் கவனிக்கிறது – ரொம்
இலங்கையில் என்ன நடக்கிறது என்பது உலகம் முழுழுவதிலும் உள்ள மக்களுக்கு முக்கியமான விடயமாக இருக்கிறது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர், ரொம் மாலினோவ்ஸ்கி தெரிவித்தார்.
இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், நேற்று மாலை நிஷா பிஸ்வாலுடன் இணைந்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்துப் பேசினார்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ரொம் மாலினேவ்ஸ்கி,
“நல்லிணக்க மற்றும் மறுசீரமைப்பு செயற்பாடுகளில் அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது குறிப்பாக, காணாமற்போனோர் தொடர்பான செயலகம், இராணுவம் வசமிருந்த காணிகளின் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டமை உள்ளிட்டவற்றைக் குறிப்பிடலாம்.
நல்லிணக்கச் செயல்முறைகளுக்கு ஆதரவளிக்கும், வகையில் இலங்கைக்கு பொருளாதார ஆதரவை அமெரிக்கா வழங்கும். இலங்கையில் என்ன நடக்கிறது என்பது உலகெங்கும் உள்ள மக்களுக்கு முக்கியமான விடயமாக உள்ளது.
இலங்கை அமைதியை அடைவதில் ஆர்வம் கொண்டுள்ளது. அந்த இலங்கை அடைவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








