லண்டனில் தொடரும் சோகம் நேற்றும் இரு தமிழ் 2இளைஞர்கள் பலி, 3பேர் மாயம்!
நேற்று பிரித்தானியாவின் ஹம்பர்சான்ட் கடலில் குளிக்கும் போது நீரில் மூழ்கிப் பலியான ஐந்து இளைஞர்களும், ஈழத்தமிழர்கள் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.
ஒன்றாகக் கடலில் மூழ்கிப் பலியான மேற்படி ஐந்து இளைஞர்களும் யார் என்பதையோ அல்லது அவர்களின் அடையாளங்களை எவை என்பதையோ உறுதிப்படுத்த முடியாமல் பிரித்தானிய காவற்துறையினர் நேற்று முதல் திணறி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது மேற்படி ஐந்து இளைஞர்களும், தென்கிழக்கு லண்டனின் கிறின்விச் பகுதியிலிருந்து ஹம்பர்சான்ட் கடற்கரைக்கு குளிக்கச் சென்ற தமிழர்கள் என்பது தெரியவருகிறது.
இதுவரை கிடைத்த தரவுகளின்படி பலியானர்வர்கள் நிதர்சன் ரவி, கோபிநாதன், கென் நாதன் மற்றும் குரு ஆகியோர் எனத் தெரிகிறது. பலியான ஐந்தாவது நபரின் பெயர் இதுவரை தெரியவில்லை.
நேற்றைய தினம் பிரித்தானியாவில் அதியுச்ச வெப்பநிலை நிலவிய நிலையில் இவர்கள் அனைவரும் ஒன்றாக ஹம்பர்சான்ட் கடற்கரைக்கு குளிக்கச் சென்றிருந்தனர்.
ஆயினும் இவர்கள் அனைவரும் கடலில் குளிப்பதற்கு ஏற்ற வகையில் உடைகளணியாமல் காற்சட்டைகள் மற்றும் ரீ-சேர்ட்டுகளை அணிந்து குளித்துள்ளனர். இவர்கள் ஒன்றாகக் குளித்த பிற்பகல் வேளையில் இந்தத் துன்பியல் இடம்பெற்றுள்ளது.
கடலில் குளித்த சிலர் தத்தளிப்பதைக் கண்டு கரையிலிருந்தவர்கள் கடல்காப்பு மீட்புப் பிரிவினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட மூவருக்கு அவசர முதலுதவி பிரிவினர் சிகிச்சைகளை வழங்கினர். பின்னர் உலங்கு வானுர்தி உதவியும் பெறப்பட்டது, ஆயினும் அவர்களின் உயிரைக் காக்க முடியவில்லை.
இதன் பின்னர் மேலும் இரண்டு உடலங்கள் கரையொதுங்கின. இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. இன்னும் ஒருவர் காணாமல் போனதாக காவற்துறையினர் கருதுவதால் அவரைத்தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
ஓன்றாகச் சுற்றுலா சென்ற அனைவருமே பலியானதால் அவர்கள் குறித்து தகவல்களை வழங்க கடற்கரையில் எவருமே இல்லாததால் பலியானவர்கள் யாரென்பது குறித்து அறிய முடியாமல் காவற்துறையினர் ஆரம்பத்தில் திணறினர்.
நீச்சல் ஆடையின்றி சாதாரண உடையில் உடல்கள் மீட்கப்பட்டதால் சட்டவிரோத குடியேறிகளாக இவர்கள் இருக்கலாம் என்ற சந்தேகங்கள் முதலில் வெளியாகின. இந்தச் செய்தியையே பிரித்தானிய ஊடகங்களும் வெளியிட்டன.
இன்று பகல் வெளியான பிந்திய செய்திகளில் பலியான ஐந்து இளைஞர்களும், ஈழத்தமிழர்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. உயிர்ப் பலிகளும் கடலும் புலம் பெயர்ந்த பின்னரும் கூட ஈழத் தமிழரை விடுவதாயில்லை.