Breaking News

பிரபாகரனுடன் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகளை சீர்குலைத்த மஹிந்த!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட சமாதான முயற்சிகளை மஹிந்த ராபஜக்சவே சீர்குலைத்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன இதனை தெரிவித்துள்ளார்.

சிலாபத்தில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

இந்த அரசாங்கத்தை பலர் விமர்சனம் செய்கின்றார்கள். எனினும் கடந்த அரசாங்கத்தை விடவும் இந்த அரசாங்கம் நல்லது.

கடந்த அரசாங்கம் வரலாற்றில் இந்த நாட்டை மிகவும் மோசமான அதள பாதாளத்தில் தள்ளிய அரசாங்கமாகும். ரணில் செய்த அனைத்து விடயங்களும் பிழையானது என 2005ம் ஆண்டில் மஹிந்த கூறினார்.

“புலிகளுக்கு இடமளிக்கப்பட்டது, புலிகளை ரணில் தோளில் சுமக்கின்றார்கள், நாடு அழிக்கப்பட்டுள்ளது. எனவே நாட்டில் சௌபாக்கியத்தை உருவாக்குவேன்” என மஹிந்த கூறினார்.

எனினும் ரணில் விக்ரமசிங்க என்ன செய்ய திட்டமிட்டிருந்தார்?

பிரபாகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் கைச்சாத்திட்டு நாடு பிளவுபடும் உரிமையின்றி உள்ளக சுயாட்சி அதிகார பொறிமுறைமை ஒன்றை உருவாக்க ரணில் திட்டமிட்டார்.

எமக்கு பிளவடைய வேண்டிய உரிமை அவசியமில்லை என்றே பிரபாகரன் கூறினார். ரணிலின் திட்டத்திற்கு உடன்பட்டிருந்தார்.

இணக்கப்பாடு குறித்த உத்தேச அரசியல் அமைப்பு முறைமை ஆவணமொன்று முன்வைக்கப்பட்டது. இந்த ஆவணத்தை சிங்களத்தில் மொழிபெயர்க்காது மஹிந்தவும் விமல் வீரவன்சவும் பல்வேறு குழப்பங்களை விளைவித்து, ஆவணங்களை கிழித்து குப்பையில் போட்டனர்.

மஹிந்த ராஜபக்ச 2005ல் இனவாதத்தை விதைத்து நாட்டை குழப்பி ஆட்சியை கைப்பற்றினார். போர் செய்யாது நாட்டின் சொத்துக்கள் அழிவடைவதனை பாதுகாத்து நல்ல பயணமொன்றை மேற்கொள்ள முயற்சித்த ரணிலை, புலி ரணில் என மஹிந்த அடையாளப்படுத்தினார்.

அவ்வாறு கூறிய மஹிந்த நாட்டை கண்ணீர் ஆறாக, இரத்தக் கடாக மாற்றி போர் செய்தார். வடக்கு கிழக்கு மாகாணங்கள் அழிக்கப்பட்டன.

கொலையாளிகள் உள்ள நாடாகவே முழு உலகமும் எம்மை பார்த்தது. மஹிந்த இந்த மண்ணை ரத்தத்தினால் நனைத்தார். பௌத்த நாடாக கருதப்பட்டாலும் மிலேச்சத்தனமான பிக்குகள் இருக்கும் நாடாக இலங்கை சித்தரிக்கப்பட்டது.

இவ்வாறு பல வழிகளிலும் மஹிந்த நாட்டை அழித்தார். தற்போதைய அரசாங்கம் நாட்டை மீட்டு எடுக்க முயற்சிக்கின்றது. இந்த அரசாங்கத்திற்கு சார்பாக பேசுவதாகவும், இந்த அரசாங்கத்தின் கைக்கூலிகளாகவும் எம்மை சிலர் அடையாளப்படுத்தகின்றனர்.

நாம் இந்த அரசாங்கத்தின் செல்லப்பிராணிகள் தான். எனினும் நாம் சொல்லும் நல்லதை கேட்கும் எஜமானர்களாக அரசாங்கத்தை மாற்றவே நடவடிக்கை எடுக்கின்றோம்.

நல்லிணக்கம், சமாதானம், நல்லாட்சி, ஜனநாயகம் போன்றவற்றுக்காக போராடுகின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.