ஸ்ரீ.சு.கவின் 65ஆவது சம்மேளனம் இன்று : குருநாகலில் பாதுகாப்பு தீவிரம்
சுதந்திரக் கட்சியின் 65ஆவது சம்மேளனம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் குருநாகலையில் கொண்டாடப்படவுள்ளது.
குருநாகலை மாளிகாபிட்டிய விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது.
குறித்த சம்மேளனத்தில் அதிகளவானவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை போக்குவரத்து சபையின் அனுமதிக்கப்பட்ட பேரூந்துகள் மற்றும் தனியார் பேரூந்துகளும் பெருமளவில் சேவையில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, சுமார் 1500 அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குருநாகல் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேஸ் சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளுள் ஒன்றான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, 1951ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவால் ஆரம்பிக்கப்பட்டது. 1956இல் முதல்முறையாக ஆட்சிபீடம் ஏறிய சுதந்திரக் கட்சி, சோசலிச நாடுகளுடன் மிக நெருக்கமான தொடர்பை கொண்டிருந்தது. தற்போது ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து முதன்முதலாக தேசிய அரசாங்கத்தை அமைத்து செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
.